Tuesday, 15 January 2019

மிஸ்டர் சுகவனம் - பாகம் 11

சுகவனத்தின் "உணவக கலாட்டா"

இரண்டு நாட்கள் கழித்து... அலுவலகத்தில் தனது இருக்கையில் அமர்ந்திருந்த சுகவனத்தைப் பார்த்த வினோத்...

"என்ன சுகவனம் ஸ்மார்ட் ஃபோனுக்கு மாறிட்டீங்க போல..." என்றான்  நக்கலாக சிரித்துக்கொன்டே...

"அதை ஏன்டா கேக்குற... நம்ம எதிர்பார்ப்பை எடுத்து சொன்னா ஒருத்தனுக்கும் புரியல... தவிரவும்,

நாம என்னதான் தேடி தேடி... நல்லா விசாரிச்சு வாங்கினாலும்...
"இப்படி ஒரு ஃபோனை வாங்கவா இவ்ளோ செலவு பண்ணீங்க...
ஒரு ஃபோனை கூட ஒழுங்கா பார்த்து வாங்க தெரியலையே உங்களுக்குன்னு... சரமாரியா கேள்வி கேப்பா...

நம்ம மனசுல தோணும்... பொண்டாட்டிய கூடத்தான் ஒழுங்கா செலக்ட் பண்ண தெரியலேன்னு...
ஆனா வெளியில சொல்லக்கூடாது... சிரிக்கவும் கூடாது...
கம்முனு கேட்டுக்கணும்...

இதுவே ... அவளா பார்த்து ஒரு ஃபோனை வாங்கி கொடுத்தா ....
என்னமோ உலகத்திலேயே உன்னதமான ஃபோனை வாங்கி கொடுத்திட்ட மாதிரி பெருமை பேசுவா...

அதனால...அவ பொறுப்பிலேயே விட்டுட்டேன்... கடைசியா நான் எதை வேணாம்னு சொன்னேனோ அதே "Telkon - 'U will feel" (டெல்கான் - யூ வில் ஃபீல்) மொபைல் ஃபோன்தான் வாங்கி கொடுத்தா... கேட்டா இதுலதான் ரேடியேஷன் கம்மியா இருக்குங்கறா ... "விதி வலியாதுடா" வினோத்...."என்று முடித்தார் சுகவனம்...

சிரித்துக்கொண்டே நகர முயன்ற வினோத்திடம்...
"வினோத் இன்னைக்கு நைட் உங்ககூட ஹோட்டல்லதான் சாப்பாடு...." என்றார் சுகவனம்

"ஏன் என்னாச்சு... வீட்ல துரத்தி விட்டுட்டாங்களா..." என்றான் வினோத் கண் சிமிட்டியபடியே...

"ம்... அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை... நான் இல்லாம, அதுவும் என்னை திட்டாம அவளால ஒரு நாள் கூட இருக்க முடியாது.... அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கா... இப்போ கூட புது ஃபோன் எதுக்குன்னா... பழைய ஃபோன்ல சரியா கேக்கமாட்டேங்குதுன்றதை கண்டுபிடிச்சுட்டா..." என்றார் சுகவனம்

"எப்படி" என கேட்டான் வினோத்...

"வழக்கமா அவ ஃபோன் பண்ணினா, ஏதாவது வாங்கிட்டு வர சொல்லுவா இல்லனா திட்டுவா... அதனால நான் எப்பவுமே அவ திட்ட ஆரம்பிச்சதும்... ஃபோனை கீழ வச்சுட்டு... 'ம்.. ம்ஹும்...' மட்டும் தான் சொல்லுவேன்...
அவளே பேசிட்டு கட் பண்ணிடுவா... எப்பவுமே என் பதிலே எதிர்பார்க்கமாட்டா...

இவ  ஒரு முறை...
'நான் என்ன லூசா'ன்னு கேட்டிருக்கிறா போல...

நான் வழக்கம்போல 'ம்...' சொல்லிட்டிருக்கிறேன்...


நம்ம நேரம் அப்படி... என்ன செய்யறது...
நான் வீட்டுக்கு போனதும்...
அவங்க அம்மாவை என் நம்பருக்கு ஃபோன் பண்ண சொல்லி பேசியிருக்கா... அப்பதான்... குரல் கம்மியா கேக்குது... நான் ஒரு குத்துமதிப்பாதான் பதில் சொல்லி இருக்கிறேன்னு தெரிஞ்சிகிட்டா...

கெட்டதிலேயும்  ஒரு நல்லது...

இன்னும் நான் ஃபோனை கீழ வச்சுட்டுதான் பதில் சொல்றேன்னு தெரியாது... அது தெரிஞ்சா... அடுத்து என்ன, எப்படி வெடிக்கும்ன்னு தெரியாது...

நித்யகண்டம் பூர்ணாயுசு மாதிரி ஆகிடுச்சு..."

என்று முடித்தார் சுகவனம்...

அன்றைய பொழுது அலுவலகத்தில்.... சபாபதியுடன் திரைப்பட வசனங்கள் பேசியும்... ரவியின் "ப்ளட் பிரஷர்" ஏற்றி இறக்கியும் கழித்தார் சுகவனம் ...

இரவு ஒரு எட்டு மணிபோல் சுகவனம் தலைமையிலான வினோத் உட்பட 13 பேர் அடங்கிய குழு வசந்த பவனில் உணவருந்த சென்றனர் ...

உள்ளே சென்றதும் சுகவனம் தலைமை வகிக்க ஆரம்பித்தார்...
"வினோத் இந்த மூணு டேபிளையும் ஒண்ணா சேர்த்து போட்டா சரியா இருக்கும்னு நினைக்கிறேன்" என்றார் சுகவனம்...

சொன்னது போலவே அமைக்கப்பட்ட நாற்காலிகளில் கிழக்கு மேற்க்காக... 12 பேரும்.... பக்கவாட்டில் வட திசையை நோக்கி 13வதாக சுகவனமும் அமர்ந்தனர்...

காலை முதல் பரிமாறிய களைப்பில் இருந்தாலும், களைப்பை வெளிக்காட்டாமல் இருக்கைகளை சரி செய்து அனைவருக்கும் தண்ணீர் பரிமாறிவிட்டு, அவர்களை நிமிர்ந்து பார்த்து புன்னகையுடன்...
"சார்... என்ன சாப்பிடுறீங்க...என்று கேட்டார்..."

அனைவரும் தங்களுக்கு வேண்டியதை, குறிப்பாக எவை எல்லாம் சீக்கிரம் பரிமாறப்படுமோ, எவை எல்லாம் சாப்பிட்ட பிறகு வயிற்றுக்கு பிரச்சினை இருக்காதோ அப்படியாக தங்கள் தேவைகளை சொன்னார்கள்...

அருகிலிருந்த கேப்டன் அனைத்தையும் குறித்துக்கொண்டு...
எதுவும் சொல்லாத சுகவனத்தை பார்த்தார்...

"என்னப்பா இது வழக்கம்போல இட்லி... தோசை... பொங்கல்ன்னு ... "மெனு கார்டு" கிடைக்குமா என்று கேட்டார் ... கேப்டன் சுகவனத்திடம் மெனு கார்டை எடுத்து கொடுத்தார்...

"அவங்களுக்கு கொடுங்க... அதுக்குள்ள நான் பார்த்து சொல்றேன்...." என்றார் சுகவனம்...

சிறிது நேரம் கழித்து... உணவு பரிமாறுபவர் கையில் மூன்று தட்டுகள், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு  தோசை, தட்டிற்கு இடமும் வலமும் நீண்டு ஆடிக்கொண்டே வந்தன...  ஒரு பக்கம் பரிமாறுபவர் முகத்திற்கு நேராக ஆடிக்கொன்டே வந்தது... தோசையின் வாசம் அவரது மூக்கிற்கும்... அவரது சுவாசம் தோசைக்குமான பரிமாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது...

தட்டின் மீது ஒரு தோசை அதன் மீது இன்னொரு தட்டு... அதன் மீது ஒரு தோசை... அதன் மீது ஒரு தட்டு என தட்டின் மீது தோசையா அல்லது தோசை மீது தட்டா என்பதை புரிந்துகொள்ள சிறிது நேரம் ஆகவே செய்யும்....

தட்டிற்கு அடியில் சுத்தமாக இருக்குமா என்பதை எல்லாம்  ஆராயக்கூடாது.... ஆராய்ந்தால் தோசை கிடையாது....

மூன்று பேருக்கும் கொண்டு வந்த தோசையை பரிமாறினார் ஊழியர்... பரிமாறிவிட்டு சுகவனத்தை பார்த்தார்...

"இது என்னப்பா 'பஞ்சாபி தாளி' தாளி செண்டிமெண்ட் பஞ்சாப்ல கூடவா இருக்கு" எனச் சொல்லி சிரித்தார்...

சிரிக்கமுடியாவிட்டாலும்... விருந்தோம்பல் காரணமாக ஊழியரும் சிரமப்பட்டு சிரித்துவைத்தார்... கேப்டனிடம் குறைசொல்லிவிட்டால் .. அதை வேறு சமாளிக்கவேண்டும்...

சுவிட்ச் போட்டு நிறுத்தியது போல தீடீரென சிரிப்பை நிறுத்திய ஊழியர்...
"சார்... உங்க ஆர்டர்..." என இழுத்தார்...

"நீங்க மத்தவங்களுக்கு கொண்டுவந்து கொடுத்துக்கிட்டே இருங்க சார்.... நான் சொல்றேன்" என்றார் சுகவனம்...

சுகவனம் பதில் சொல்லிய தோரணை ஊழியரின் மனதில் ஏதோ பொறி தட்டியது....
"என்ன நடந்தாலும்... அமைதியா இருக்கணும்.... நேத்தே கேப்டன் கிட்ட முறைச்சிக்கிட்டோம்... இன்னைக்கும் அது தொடர கூடாது... இறைவா... எனக்கு அந்த சக்தியை கொடு" என்று மனதிற்குள்ளேயே வேண்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்...

"ப்...பா... தேங்காய் சட்னி ஃபிரெஷா இருக்கு..." என்று ரசித்து ருசித்து சாப்பிட்டான் விஜய்... சாப்பிட்டுக்கொண்டே நிமிர்ந்து சுகவனத்தை பார்த்தான்...
சுகவனம் ஓரக்கண்ணால் விஜயை பார்த்தார்... யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று நினைத்து...

"சீக்கிரம் ஆர்டர் பண்ணுங்க சுகவனம்... அப்புறம் எங்களுக்கு வயிறு வலிக்கப்போகுது" என்றான் விஜய்...

"ஓ... பார்த்துட்டானா... சரி இந்த முறை கண்டிப்பா நம்ம ஆர்டரை சொல்லி அனுப்பிடனும் என்ற முடிவுக்கு வந்தார்..."

உணவு பரிமாறும் ஊழியர் ஒரு கையில் "நெய் ரோஸ்ட்" மறு கையில் "கல் தோசை" கொண்டு வந்தார்...

"என்னப்பா இது கோமாளி குல்லா மாதிரி இருக்கு... எந்த கோமாளி இதை ஆர்டர் பண்ணது..." என்று லேசாக கண் சிமிட்டியவரே  கேட்டார் சுகவனம்...

"கீ (நெய்) ரோஸ்ட்" சார் என்று சொல்லியபடியே வினோத்துக்கு பரிமாறினார் அந்த ஊழியர்...

வினோத் லேசாக முறைத்தபடி சுகவனத்தை பார்த்தான்

"நீ தானா டா?.....
அநேகமா மாஸ்டர் இதுக்கு முன்னாடி பட்டறையில வேலை பார்த்திருப்பார்னு நினைக்கிறேன்....
இல்லாட்டி இதுக்குனே மோல்ட் செஞ்சி வச்சிருப்பார்னு நினைக்கிறேன்....

ப்... பா... எவ்ளோ ஷார்ப்பா தகடு மாதிரியே இருக்கு"
என்று அந்த நெய் ரோஸ்ட்டின் உச்சிப்பகுதியை தொட்டு பார்த்து சொன்னார் சுகவனம்...

"சாஃப்ட்டா வேணும்னா கல் தோசை ஆர்டர் பண்ணுங்க சுகவனம்" என்று கார்த்திக் சொன்னான்...

"கல் தோசையா... பார்த்துடா அது இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கப்போகுது..." என்று கிண்டலாக சுகவனம் சொன்னதை உண்மையிலேயே அவருக்கு தெரியவில்லை போல என நினைத்து விளக்க ஆரம்பித்தான் கார்த்திக்...

"இல்ல சுகவனம் இது கொஞ்சம் நிறைய மாவு போட்டு கொஞ்சம் 'மொத்தா' இருக்கும்...." என விவரித்தான் கார்த்திக்...

"நிறைய மாவா... அதெல்லாம் ஒண்ணுமில்லை கார்த்திக்... அதே ஒரு கப் மாவு தான்... தவாலே நல்லா பரவலா  ஊத்தி மெழுகி, பக்குவமா சுரண்டி சுருட்டி எடுத்தா அது "ரோஸ்ட்", அப்படியே மொத்தையா ஊத்தி லேசா தடவி எடுத்தா "கல் தோசை"... மொத்தத்தில... கல் தோசைன்றது அரைகுறையா தீஞ்ச மாவு... அப்படியே பாரு ஓரத்திலே மாவு வேகாமாலே இருக்கும்.... சேர்த்து சப்பிட்டே நாளைக்கு லீவு...

ரோஸ்ட்ன்றது மொத்தமா தீஞ்ச மாவு... வெறும் கார்பன் தான்... சட்னி சாம்பார்லதான் ஏதாவது உடம்புக்கு தேவையானது இருக்கும்" என்ற சுகவனம் தொடர்ந்து...

"நல்ல சம்பர்ல ஊரவச்சு சாப்பிடு வினோத்.... இவருக்கு இன்னும் ரெண்டு கப் சாம்பார் கொண்டுவாப்பா... " என்று அந்த ஊழியரிடம் சொன்னார் சுகவனம்

"முதல்ல உங்களுக்கு ஆர்டர் பண்ணுங்க சுகவனம்..." என்றான் வினோத் சற்றே எரிச்சலுடன்...

"எனக்குதானே... முடிவுபண்ணிட்டேன்... நீ போய் சாம்பார் கொண்டுவாப்பா... என்னுடைய ஆர்டரை சொல்லறேன்..." என்றார் சுகவனம்

"சுகு எனக்கு இதுவே போதும்... நான் தொட்டு சாப்பிட்டுகிறேன்" என்றான் வினோத்...

"சொன்னா கேளுடா வினோத்... நம்ம உணவு பாதையெல்லாம் ரொம்ப சாஃப்ட்... இந்த தீஞ்ச மாவு தகடு மாதிரி உள்ளே போனா... அப்பறம் எரிய ஆரம்பிச்சிடும்... அது புரியாம காபி குடிப்ப... வாழைப்பழம் சாப்பிடுவ... தண்ணி குடிப்ப... சோர்ந்து போயி தூங்கிடுவே... காலைலே போராட்டமாயிடும்... உன் நல்லதுக்கு தன சொல்றேன்.... நல்லா ஊரவச்சு சாப்பிடு..." என முடித்தார் சுகவனம்...

சுகவனம் சொல்லிய இந்த பின் விளைவுகளை வினோத் பலமுறை அனுபவித்திருக்கிறான்... ஆனால் ஒருவரும் இப்படி விளக்கியதில்லை...

"ச்..சே... எத்தனை முறை அவஸ்தைபட்டிருப்போம்... சாப்பிட்றதுல என்ன நாகரிகம்.... தான் ஒரு பெரிய... தத்துவ விளக்கம் அடைந்துவிட்ட பெருமிதத்தில் வினோத் தனது நெய் ரோஸ்ட்டை தாக்கி சுக்குநூறாக்கி அதன் மீது சாம்பாரை கொண்டு அபிஷேகம் நடத்தினான்..."

"சார் உங்க ஆர்டர்..." என்ற ஊழியரிடம்

"பதட்டப்படாம கேட்டுக்கோங்க..." என்று ஆரம்பித்தார் சுகவனம்

"பதட்டப்படாம" என்ற வார்த்தையை கேட்டதும் அந்த ஊழியரின் மனதில் பதட்டம் உண்டாகியது....

தன்னுடைய ஆர்டரை விவரித்த சுகவனம்... 

....வியர்த்துப்போன ஊழியர்....

தொடரும்....