Wednesday, 28 November 2018

மிஸ்டர் சுகவனம் - பாகம் 7

... சுகவனத்தின் (இல்)வாழ்க்கை


அடுத்த நாள் காலை தனது வீட்டிலிருந்து வாக்கிங் செல்ல தயாரான சுகவனத்தின் முன்... டம்பளரை கொண்டு நீட்டினாள் புவனா...

சற்றே தடுமாறிய சுகவனம் சுதாரித்துக்கொண்டு
"நான்தான் காபியை விட்டுட்டேனேம்மா..." என்றார்

"இது காபி இல்லைங்க...." என்றாள் புவனா

ஒரு நிமிட அமைதி.... (சுகவனத்தின் மனதிற்கு தவிர ...)

"அப்புறம்...." என்று இழுத்தார் சுகவனம்...

"குடிச்சிப்பாருங்க..." என்றாள் புவனா புன்னகையோடு....

புவனாவின்  சிரித்த முகம்  சுகவனத்திற்கு மிகவும் பிடிக்கும்....

அடிக்கடி, "இந்தச் சிரிப்புதான்..." என புகழ்வார்... 
புவனா எவ்வளவு கோபப்பட்டாலும் இதுபோன்று ஏதாவது சொல்லி புவனாவை வெட்கப்பட வைத்துவிடுவார்...

புவனாவின் சிரிப்பை பார்த்ததும்....
           - பட்ட காலிலேயே படும்... சுகவனத்தின் நிலை ...
           - நாய் வாலை நிமிர்த்த முடியாது.... சுகவனம் மனதின் நிலை...

 சரி தனக்காக ஏதோ புதிதாக செய்திருக்கிறாள் போல என நினைத்து... காபி அனுபவத்தை மறந்து...
"இது நல்ல ருசியாக இருக்குமா?... "
"இல்ல எனக்கு பிடிச்ச மாதிரி காபிபோட்டிருப்பாளோ?..." என்ற ஆவலுடன் டம்பளரை வாங்கினார்....

டி.வி.யில் அதிகாலை பக்தி பாடல் ஓடிக்கொண்டிருந்தது... அதை பார்த்துக்கொண்டே பருக ஆரம்பித்தார்...

"... இது என்ன பால் பாயசம் மாதிரி இருக்கு... ஆனா வேற கலர்ல வேற ஏதோ  கலந்திருக்குற மாதிரி இருக்கே..." என்று யோசிக்கும்போதே...

டி.வி.யில் விளம்பரம் வந்தது...
"இதுலே அதிமதுரம், வேம்பு, சுக்கு, மிளகு..... ஆயுர்வேத பொருட்கள் எல்லாம் கலந்திருக்கறதாலே...." என்று ஒரு வயதான பெண்மணி மூக்கடைத்த குரலில் சொல்லிக்கொண்டே இளம் பெண்ணிடம் கொடுக்கிறார்....

சட்டென சுகவனத்திற்கு உரைத்தது...
"அடச்சே... மசாலா டீயா... நல்ல வேலை பாயசம்னு சொல்லி மாட்டியிருப்போம்... "

"அடப்பாவிங்களா மருந்து வேணும்னா நேரடியா தேன் கலந்து சாப்பிடவேண்டியதுதானே... அதை ஏன்டா டீயில கலந்து எங்களை படுத்துறீங்க.... இத கண்டுபிடிச்சவன கூட்டிட்டு வந்து அவனேயே குடிக்கவெக்கணும்..." என்று மனதிற்குள்ளேயே கடிந்துகொண்டார்...

நிமிர்ந்து புவனாவை பார்த்து... "மசாலா டீயா..மா... (சிறு இடைவெளிவிட்டு) நல்லாயிருக்கு..." என முடித்தார்.

"ஆனா பித்தம் இருக்கறதால டீ, காபி எல்லாம் குடிச்சா, கை காலெல்லாம் 'எரியும்'...." என்று 'எரியும்' என்பதை அழுத்தமாகவே சொன்னார்...

"வெறும் தண்ணி போதும்மா.... வேணும்னா கொஞ்சம் சூடு பண்ணி கொடு...
ம்... அது வேற... இப்ப எல்லாமே ஆர்.ஓ. வாட்டர்...
ஒருத்தன் சூடு பண்ணலாம்னு சொல்றான்...
ஒருத்தன் கூடாதுன்னு சொல்றான்...
எதுக்கும் கொஞ்சம் லேசா சூடானதும் இறக்கிடு... அது போதும்..."

"அப்பாடா இனிமே தப்பிச்சோம்" என நினைத்து தப்பு கணக்கு போட்டுவிட்டார் சுகவனம்.

... அடுத்தநாள் காலை.... வாக்கிங் செல்ல தயாரான சுகவனத்தின் முன்... டம்பளரை கொண்டு நீட்டினாள் புவனா...

வெதுவெதுப்பான தண்ணீர் என நம்பி, கையில் வாங்கியதும், எந்த யோசனையும் செய்யாமல் வாயில் வைத்து உறிஞ்சிவிட்டார்... அவருடைய நம்பிக்கை தவிடுபொடியானது...

நாக்கில் ஏற்பட்ட லேசான காரம் திடீரென விஸ்வரூபம் கொண்டு தொண்டையை கவ்வியது... எதிர்பாராத இந்த தாக்குதலால் அவரது கண்களின் பார்வை ஒரு நொடி இருண்டு போனது... ஏற்கனவே பயந்த சுபாவம் கொண்ட சுகவனத்திற்கு பயம் இரு மடங்கானது...

உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்டியது....

"ப்பா... பித்தமெல்லாம் வியர்வை மூலமா எப்படி வெளியேறுது பாருங்க..." என்றாள் புவனா... பெருமிதமாக....


"அடிப்பாவி உடம்பு மட்டுமா வேர்த்திருக்கு... கண்கள் கூடத்தான் வேர்த்திருக்கு... அது தெரியலையா...ம்..." என நினைத்துக்கொண்டு பேசா மடந்தையாக நின்றிருந்தார் சுகவனம்...

"இதுல என்ன கலந்திருக்கேன்னு கண்டுபிடிச்சிடீங்களா..." என்று புன்னகை பூத்தாள் புவனா...

எப்படியும் தனக்கு தோல்வி மட்டுமே நிச்சயம் என்ற தீர்க்கமான நம்பிக்கை ஏற்பட்டது சுகவனத்திற்கு...

சிரமப்பட்டு "என்னம்மா... சேர்த்திருக்க... இதுல..." என்றார்

சந்தோஷ மிகுதியுடன் பேச ஆரம்பித்தாள் புவனா...

"உங்களுக்கு பித்தம்னு சொன்னீங்கள்ல..." என்றாள் புவனா...

"அதான் தலைப்புச் செய்தி மாதிரி தினமும் காலையிலே சொல்லிட்டிருக்கேனே... அதுக்கென்ன...." என்றார் சுகவனம் அலுப்புடன்...

"அதான் நேத்து எங்க அம்மாகிட்ட போன்ல பேசும்போது ஏதாவது கை வைத்தியம் இருந்தா சொல்லும்மான்னு கேட்டு உங்களுக்கு வச்சு கொடுத்தேன்... பாருங்க உடம்புல இருக்குற பித்தமெல்லாம் வியர்வையா வெளியேறுது பாருங்க..." என்றாள்...

"இந்த மாதிரி "வச்சு" கொடுத்தா பித்தம் மட்டுமில்லம்மா மொத்தம் வெளியேறிடும்...அப்புறம் ஒன்னும் இருக்காது..." என்று தத்துவார்த்தமாக பேசினார் சுகவனம் ...

"போன்ல பேசும்போது" என்று புவனா சொன்னது மட்டும் சுகவனத்தின் காதுகளில் திரும்ப திரும்ப கேட்டது...
"நேத்து டி.வி. விளம்பரம், இன்னைக்கு போன்... ச்..சே... "
...ஒட்டுமொத்த டெக்னாலஜியும் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக நினைத்து பெருமூச்சு விட்டார் சுகவனம்...

"அடடா... இப்படி ஒரு அரைகுறை பித்த வைத்திய குடும்பத்திலா நம்ம  பொண்ணு கட்டியிருக்கோம்...
போட்டோ காட்டும்போது ஒண்ணுமே சொல்லலியே...
ஏழு பொண்ணு அமையலேன்னு நம்ம அப்பா அம்மாவே நம்மள இப்படி வச்சு செஞ்சிட்டாங்களோ...  ம்... இதுக்கு மேல ஒன்னும் பண்ணமுடியாது...
இதுதான் வாழ்க்கைன்னு ஆகிடுச்சு... பார்ப்போம்...
ஆனாளப்பட்ட ரஞ்சனியவே ஆபீஸ்ல சமாளிக்கிறோம்... வீட்லயும் சமாளிப்போம்... " என்ற முடிவுக்கு வந்தார் சுகவனம்...

.....கீழே விழுவது போன்ற ஒரு உணர்வு...

திடீரென விழிப்பு நிலையை எய்தினார் சுகவனம்...

"அட..ச்...சே... இதையெல்லாம் மறக்கவும் முடியல...
நினைக்காம இருக்கவும் முடியல...
விடிஞ்சா என்ன நடக்கும்னு தெரியல...  ச்.. சே... நித்ய கண்டம் பூர்ண ஆயுசு மாதிரி ஆகிடுச்சே..." என நினைத்துக்கொண்டே...
கடிகாரத்தில் மணி பார்த்தார் ஒன்றுமே தெரியவில்லை...
ஒரு க்ஷணம் பதற்றமடைந்த சுகவனம்...
தனக்கு ஏதோ ஆகிவிட்டது என எண்ணி பயந்தார்...

"ச்.சே... கண்ணாடி போடலயா..." என சுதாரித்துக்கொண்டு...
கண்ணாடி அணிந்து பார்த்தார்... மணி 11.00 ஆகியிருந்தது...

"11.00 தானா... ரொம்ப நேரமான மாதிரி இருக்கே... ம்... இதையெல்லாம் நெனைச்சிட்டிருந்தா... இப்படித்தான்...
இனிமேலயாவது நிம்மதியான தூக்கம் வருதான்னு பார்ப்போம்...
.... மீண்டும் உறக்கத்திற்கு சென்றார் சுகவனம்...

தொடரும்...

Wednesday, 21 November 2018

மிஸ்டர் சுகவனம் - பாகம் 6

... சுகவனத்தின் திருமணம் 


ஒருவழியாக எண்ண அலைகளிலிருந்து விடுபட்ட சுகவனம்... கை கால் அலம்பி ஹாலுக்கு வந்தார்... அமர்ந்த கையோடு டி.வி.யை  ஆன் செய்தார்...
ஆன் செய்யும் உரிமை மட்டுமே  அவருக்கு உண்டு... ரிமோட் கன்ட்ரோல் புவனாவிடம்...

டி.வி. மட்டுமல்ல சுகவனத்தை ஆட்டுவிக்கும் ரிமோட்டும் அவளிடமே...
அவரது 31 வயதில்... தனது கட்டுப்பாட்டை (அதாவது......) புவனாவிடம் இழந்தார்...

ஹாலுக்கு வந்ததும் டி.வி.யை  ஆன் செய்ததற்கு காரணம்... மேற்கொண்டு புவனா தன்னை கேவலப்படுத்திவிடுவாளோ என்ற அச்சம்...

ஆனால் புவனா அப்படியல்ல, தேவையில்லாமல் சுகவனத்தை கேவலப்படுத்தமாட்டாள் ...
எப்போதாவது சுகவனம் தன்னை ஒரு புத்திசாலியாகவோ அல்லது அதிமேதாவியாகவோ நினைத்துக்கொண்டு பேசினாலோ, செயல்பட்டாலோ தவிர ... மற்ற நேரங்களில் சுகவனத்திற்கு கட்டுப்பட்ட மனைவியாகவே இருப்பாள்.

புவனா பேசும் போது சிலநேரங்களில் சுகவனத்திற்கு சிரிப்பு வந்துவிடும்... அப்படி சிரித்துவிட்டால் போதும்... முடிந்தது சுகவனத்தின் கதை....
அதனால் அவரது சிரிப்பின் காரணம் தெரியாத வண்ணம் டி.வி.யை  ஆன் செய்துவிடுவார்...

அன்றும் அப்படியே... டி.வி.யை  ஆன் செய்துவிட்டு இரவு உணவருந்த அமர்ந்தார்...  உணவருந்திவிட்டு "வாக்கிங்" செல்வதாக சொல்லி பக்கத்து தெருவிலிருக்கும் டீ கடையில் தனக்கு பிடித்த காபி குடித்துவிட்டு வந்து படுத்துவிடுவார்.

சுகவனம் ஒரு காபி பிரியர்... அவரது நிச்சயதார்த்தம் முடிந்ததுமே அவர் காபியை இழந்துவிட்டார்...
ஆனால் அதை அவர் உணர்வதற்கு திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆனது...

உறக்கத்தை எதிர்பார்த்து படுத்திருந்த சுகவனம்.....


"ப்பா... இப்போ எவ்ளோவோ மேல்... கல்யாணமான புதுசுல ஆசையா மனைவி கையால காபி கேட்டு அனுபவித்ததை நினைத்துப்பார்க்க புத்தி அஞ்சினாலும்...  மனம் விடவில்லை நினைவலைகளை ஓடவிட்டது..."

சுகவனத்திற்கு புவனாவை நிச்சயம் செய்வதற்கு முன் ஏழு இடத்தில் அவரது பெற்றோர்கள் பெண் பார்க்கும் படலத்தை நடத்தி முடித்தனர்... இந்த விஷயத்தில் சுகவனம் தெளிவாக இருந்தார்...
"பெண் பார்க்க நான் வரமாட்டேன்... போட்டோ... காட்டுங்கள் சொல்லிவிடுகிறேன்..." என்றார்.
ஏழு பேரையும் சரி என்றே சுகவனம் சொல்லி இருந்தார்... ஆனால் அவரது பெற்றோர்கள் ஏதேதோ கரணங்கள் சொல்லி தவிர்த்தனர்... எட்டாவதாக  புவனாவின் போட்டோவை காட்டும்போது...
"சும்மா சும்மா போட்டோ காட்டாதீங்க... 'எல்லா விஷயத்தையும்' முடிச்சிட்டு என்கிட்டே வாங்க..." என்று கடிந்துவிட்டார்....

இதுவரை அவர் பார்த்த ஏழு போட்டோக்களை விட புவனாவின் போட்டோ ஏதோ வித்தியாசமாக இருந்தது....
மற்ற அனைவரும் ஸ்டுடியோவில் போட்டோ எடுத்திருந்தனர்.. ஆனால் புவனாவின் போட்டோ மட்டும் அவள் வீட்டு தோட்டத்தில் இருந்த தென்னை  மரங்களுக்கிடையே எடுக்கப்பட்டிருந்தது...

சுகவனத்தால் இதை யூகிக்க முடியவில்லை... போட்டோவை அவரிடம் கொடுத்த அவரது பெற்றோர்....
"பொண்ணு நல்ல உயரம்..." என்றனர்

பொண்ணு உயரமா இல்லை தெண்ணை மரம் உயரமா என புரியாமல்.... போட்டோவை 5 நிமிடம் உற்று பார்த்துக்கொண்டிருந்த சுகவனதிற்கு...
6வது நிமிடம், வழக்கமாக ஒரு ஆணுக்கு ஏற்படக்கூடிய குழப்பம் ஏற்பட்டது...

அவ்வளவுதான் புவனா சுகவனத்திற்கு பிடித்துப்போனாள்...
காரணம்?... இன்று வரை தெரியாது... எல்லாமே அந்த 5 நிமிடம் செய்த மாயம்...

நிச்சயதார்த்தம் முடிந்தது....

அதன் பிறகு தன் வீட்டிற்கு தெரியாமல் புவனாவை அவளது வீட்டில் சந்தித்தார் சுகவனம்.... முதல் முறை உப்பு போட்ட காபியும், அடுத்த முறை சர்க்கரையே  இல்லாத காபியையும் அருந்தும் பாக்கியம் பெற்றார்...

என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை... அப்போதெல்லாம் காபியின் ருசி அறியும் திறன் இல்லாமல்.... சுதி... மதி...இழந்து சுற்றிக்கொண்டிருந்தார்...

ஒருவழியாக திருமணம் முடிந்தது...

இரண்டு நாட்கள் கலகலப்பாக ஓடியது....

குறிப்பு:
புவனாவுக்கும், சுகவனத்தின் அம்மா சிவகாமிக்கும் ஏற்பட்ட "ஆழ்ந்த நட்புறவை" பின்பு ஒரு தனி தொடராக எழுத முயற்சிக்கிறேன்...

மூன்றாவது நாள் அதே நிகழ்வு...

நான்காவது நாளும் அதே நிகழ்வு...

கை நடுக்கத்துடன் காபி டம்பளரை வாங்கினார் சுகவனம்... மனதிற்குள்  "இறைவா... அப்படி இருக்க கூடாது...
நேற்று எனக்கு நாக்கு சரியில்லை... அதான்...
காபி நல்லாத்தானிருக்கும்... இருக்கணும்..." என்று நினைத்துக்கொண்டே டம்பளரின் உதடுகளில் தனது உதடுகளை பதிய வைத்தார்...

ஒரு நிமிட சிந்தனை...
காபியை உறிஞ்சி கண்களை மூடி ருசிப்பதா அல்லது... கண்களை மூடிக்கொண்டு குடித்துவிடுவதா என்ற மன சஞ்சலத்தின் இறுதியில் மனோதிடத்துடன்  காபியை உறிஞ்சினார்...

சுகவனம் மனதிற்குள்...
"ஐயோ... என்ன இது... இப்படி இருக்கிறது..." என்று நினைத்து
கண்களை திறந்து டம்பளரினுள் பார்த்தார்...
"நான் யாரு எனக்கே தெரியலையே..." என்ற பாடல் போல அந்த திரவத்தை மறைத்திருந்த நுரையை ஊதினார்... 
வாசனை மட்டும், தான் வழக்கமாக வாங்கிவரும் காபி தூளை நினைவுபடுத்தியது...

"இது என்ன திரவம்னே தெரியலையே..."

"ம்... மூக்கிற்கு எட்டிய வாசனை நாக்கிற்கு எட்டலையே" என நினைத்துக்கொண்டு...

தன் வாழ்நாளில் இப்படி ஒரு காபியை அருந்தியதில்லை..
எப்படி தயாரித்திருப்பாள், என்ற ஆச்சர்யத்துடன் ஆராய ஆரம்பித்தார்...

"சரி நாளைக்கு அவ வீட்டுக்கு போறோமில்லை அங்கேயும் ஒரு முறை காபி போடச் சொல்லி செக் பன்றோம்..." என நினைத்துக்கொண்டார்...

அடுத்த நாள் புவனாவின் வீட்டிலும் குடித்து பார்த்தார்... ம்.ஹும்... தன வீட்டில் அனுபவித்த அதே தண்டனைதான்...

நிச்சயதார்த்தம் முடிந்து இரண்டு முறை அவள் வீட்டில் காபி குடிச்சிருக்கோம்... ஆனா ருசி ஞாபகமில்லையே... ச்சே... அவ்வளவு சுரனையற்று திரிஞ்சிருக்கோமே என நினைத்து...
"ம்... இதுக்கு மேல ஒன்னும் செய்யமுடியாது..." என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டார்...

சரி இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று தீவிரமாக யோசிக்கலானார் சுகவனம்...

இனிமேல் காபி குடிப்பதை நிறுத்திவிடுவது என்ற முடிவுக்கு வந்தார்...
காரண உபயம்... "பித்தம்".... என்று சொல்லி தப்பித்து...

"உடல் நலம் காக்க..." எனச்  சொல்லி காலையில் "வாக்கிங்" என்ற பெயரில் வெளியில் சென்று கடையில் காபி குடிக்கலாம் என்ற வழிமுறையை கண்டுபிடித்தார்...

பின் விளைவுகளை யோசிக்காமல்...
 தொடரும்.... 

Tuesday, 13 November 2018

மிஸ்டர் சுகவனம் - பாகம் 5

...வீ(வி)ட்டில் சுகவனம்


மேலதிகாரி ரஞ்சனியிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சுகவனம் அன்றைய பொழுதில் தான் எதையோ சாதித்துவிட்டதை போல் எண்ணி,
நேர் கொண்ட பார்வை... நிமிர்ந்த நன்நடையோடு...வீட்டினுள் நுழைந்தார்...

நுழையும்போதே பரபரப்புடன் கைககள் சட்டை பட்டன்களை கழற்ற... காலிலிருந்த செருப்புகளை அப்படியே உதறியவாறு உள்ளே நுழைந்தார்..

நேரே பெட்ரூம் சென்ற சுகவனம் ஃபேன் ஸ்விட்ச்சை போட்டார்... தன்னுடைய விரலசைவில் ஃபேன் சுழல்வதை நினைத்து பெருமிதம் அடைந்தார்.

"அதானே சுத்திதானே ஆகணும்...." என்று முணுமுணுத்தார்...

சுகவனத்தின் மனைவி, புவனேஸ்வரி - அபார அறிவு - எல்லா மனைவிகளையும் போல்...

சுகவனத்திற்கு ஏற்ற ஜோடி...
எதிர் எதிர் துருவங்கள் ஒன்றோடொன்று ஈர்ப்புடையது என்பது இயற்பியல் - அந்த இயல் மனித குலத்திற்கும் உண்டென்பது இயற்கை...

கணவன் நடந்து வரும் காலடி சத்தத்தை கொண்டே.. இப்படி நடந்தால் செருப்புகள் எப்படி இருக்கும், வாசலில் போட்டுவைத்திருந்த மேட் எப்படி நகர்ந்திருக்கும், அடுத்து எப்படி அவர் அணிந்திருக்கும் ஆடைகள் களைந்து வீசுவார் என்று  எல்லா மனைவிகளையும் போல் எளிதாக யூகித்துவிடுவாள் புவனா.

அன்றும் அதுபோலவே நடந்தது...

ஃபேன் காற்றை அனுபவித்தவாறே... "உஸ்ஸ் ..." என்று காற்றை ஊதுவது போல் இன்றைய அலுவலக சவால்களை ஊதிவிட்டதாக எண்ணி சட்டையை கழற்றி பெட் மீது வீச துணிந்தார்...

சமையலறையிலிருந்து குரல் வந்தது....
"சட்டைய ஹங்கேர்ல மாட்டுங்க...." என்றாள் புவனா....

ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனார் சுகவனம்...
அவளுக்கு எப்படி தெரியும்... ஒரு வேல... கேமரா ஏதும் வைச்சிருப்பாளோ என யோசிக்கலானார்...

அலுவலகத்தில்தான் விட்டுட்டோம்... அந்தம்மா கிட்ட தலைகுணிய வேண்டியதாயிடுச்சு.... வீட்ல விடக்கூடாது என மனதிற்குள் நினைத்துக்கொண்டார்....

சமையலறையிலிருந்து புவனா வந்தாள்... பேசிக்கொண்டே....

"ஏன் செருப்ப அப்படி எறிஞ்சிட்டு வந்திருக்கீங்க?..."

"ஏன் மேட் அப்படி நகர்ந்திருக்கு?... "

"சட்டைய கழட்டுனா ஹங்கேர்ல மாட்ட வேண்டியதுதானே ?...."

"வெளியில போயிட்டு வந்தா, கை காலெல்லாம் கழுவிட்டு வர வேண்டியதுதானே..."

"சின்ன பிள்ளைக்கு சொல்லற மாதிரி தினமுமா சொல்லுவாங்க?..."

அடுத்தடுத்த கேள்விகளால் அதிர்ந்து போனார் சுகவனம்...

விழி பிதுங்கி நின்ற சுகவனத்தைப் பார்த்து...

"ம்.... இதுல ஒன்னும் குறைச்சலில்ல..." என முடித்தாள் புவனா...

எப்படியும் இன்று விட்டுக்கொடுப்பதில்லை என்று முடிவு செய்த சுகவனம்... தன் மனதிற்குள் தயாரானார்...

"விதி வலியது..."
எதையும் அனுபவித்த பிறகே சுகவனம் இந்த வாசகத்தை சொல்வார்.... காரணம் அதுபோன்ற அனுபவங்களிலிருந்து சிக்காமல் தப்பிக்க அவருக்கு தெரியாது...

"எவ்ளோ பெரிய ரிப்போர்ட் தெரியுமா?..."
"எவ்ளோ பெரிய Turn-over தெரியுமா?..."
"எத்தனை லட்சம்... எவ்ளோ டென்ஷன் தெரியுமா?..." என்று முயற்சி செய்து கேட்டுவிட்டார் சுகவனம், விளைவுகளை யோசிக்காமல்...

சுகவனம் தப்புக்கணக்கு போட்டது ரிப்போர்ட்டில் மட்டுமல்ல... தன் மனதிலும் கூட ....


கேள்வி கேட்டுவிட்டு, இடுப்பில் கை வைத்துக்கொண்டு நிமிர்ந்து புவனாவை பார்த்தார்...

சுகவனம் அந்த நிறுவனத்தில் சேர்ந்து 15 ஆண்டுகள் ஆகிறது... அலுவலகத்தில் புதிதாக சேர்ந்த போது, அங்கு நடப்பவைகள் ஒன்று விடாமல் புவனாவிடம் "discuss" என்ற பெயரில் ஒப்பித்துவிடுவார்..

நிச்சயதார்த்தம் முடிந்த ஆண்கள் எப்படி உணர்ச்சிவயப்பட்டு... தன்னுடைய மற்றும் தன் குடும்பம் சார்ந்த விவரங்களை, சுயக்கட்டுப்பாடின்றி... பின் விளைவுகள் பற்றி ஆராயும் திறனிழந்து... உளறிவிடுவார்களோ அது போல...

திருமணத்திற்கு பிறகு....

"ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்"...
"தன் வினை தன்னைச் சுடும்"...
 "வினை விதைத்தவன் வினையறுப்பான்"....
என்பன போன்ற வாசகங்களை மட்டுமே பேசக்கூடும்...

அது போலவே சுகவனதின் நிலையும்....

....ஆரம்பித்தாள் புவனா....

"சும்மா குதிக்காதீங்க.....

"உங்க ஆபீஸ் Turn-overக்கு நீங்க என்ன செஞ்சீங்க..."

"யாரோ வெய்யில்லேயும் மழையிலேயும் திரிஞ்சி சேல்ஸ் பண்ணிட்டு வர்றாங்க.... அந்த விவரத்தை பேப்பர்ல பார்த்து "எக்ஸல்ல (ms-excel)"டைப் பண்ணி பிரிண்ட் எடுத்து கொடுக்கறதிலேயே 1008 தப்பு..."

"நானா இருந்தா நீங்க கொடுக்கற ரிப்போர்ட்டை கிழிச்சி உங்க மூஞ்சிலேயே எரிஞ்சிருப்பேன்..."

"அப்பகூட என்ன தப்புனு உங்களுக்கு புரியாது..."

"சும்மா.... இங்க வந்து அலட்டிக்கீறிங்க...."

பேய்-அரைந்தாற்போல் நின்றார் சுகவனம்....

"ஆகா... கிழிச்சிஎரிஞ்சது இவளுக்கு எப்படி தெரியும்..."

"ஆபீஸ்ல நடந்தத இவ்ளோ தெளிவா சொல்லறாளே..."

"ம்ஹூம் .... இதுக்கு மேலயும் நம்ம ஆபீஸ் வேலையோட பெருமையை இவகிட்ட பேசக்கூடாது... இப்படி அசிங்கப்படுத்திட்டாளே... ச்சே..."

"அப்போ ரஞ்சனிக்கு பதில் யார் இருந்தாலும் நம்ம கதி இதுதானா... இது தெரியாம போச்சே..." என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டார் சுகவனம்.

எப்போதுமே நமக்கு ஓரிடத்தில் உருவாகும் கேள்விகளுக்கு வேறு ஒரு சந்தர்ப்பத்தில்... எதிர்பாராத விதமாகத்தான் பதில் கிடைக்கும்... அது போலத்தான் சுகவனத்திற்கு ஆபீஸ் சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கு புவனா மூலமாகத்தான் விடை கிடைக்கும்...

அப்படியொரு முக்கியமான ரிப்போர்ட்டை தயாரிக்கும் தனக்கு என் இப்படி நடக்கிறது என்பது அவருக்கு புரிந்தது...

நிறுவனத்தின் வருமானத்திற்கும் தனக்கும் பெரிய சம்பந்தம் ஒன்றுமில்லை என்பதை புரிந்துகொண்டார் சுகவனம்...

நிமிர்ந்து பார்த்தார் சுகவனம்... புவனா அங்கில்லை... எப்போது போனாள் என தெரியவில்லை... சமையலறையிலிருந்து குரல் வந்தது...

"ஆபீஸ்ல நடந்ததையே நினைச்சுட்டு இருக்காம... குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்..." என்றாள் புவனா...

ஆபீஸில் தனக்கு ஏற்படும் அனுபவங்களை யாரோ புவனாவுக்கு தெரிவிக்கிறார்கள் என்ற சந்தேகம் எப்போதுமே சுகவனத்திற்கு உண்டு...

தொடரும்....

Monday, 5 November 2018

மிஸ்டர் சுகவனம் - பாகம் 4

...அலுவலக அலப்பறைகள்


30 நிமிடம் கழிந்தது... கற்பனையிலிருந்து விடுபட்டு விழித்துக்கொண்டே தலையை சாய்த்தவாறு சரிந்திருந்தார் சுகவனம்...
மற்றுமொரு 10 நிமிடம் தான் என்ன செய்யவேண்டும் என்று யோசித்தார்...

"எழுந்துக்றோம்... ரிப்போர்ட்டை கொண்டு போய் டேபிள்ல போடறோம்... ராஜா மாதிரி திரும்பி வர்றோம்..." என்று தெளிவாக தன்னை தயார் செய்துகொண்டிருந்தார் சுகவனம்

வாழ்வில் நம் மனதை சில விஷயங்களுக்காக தயார் செய்துகொண்டிருக்கும் போது சம்பந்தமே இல்லாமல் யாரே ஒருவர் நமது சிந்தனையை கலைப்பார்... நமது மனமும் அவர் சுட்டிக்காட்டும் விஷயத்தில் லயிக்க ஆரம்பித்து நம் சிந்தனையை லேசாக விட்டுக்கொடுத்துவிடும்...


அவர் சிந்தனையில் இருக்கும் போது... இன்டர்காம் மணியடித்தது.... அவ்வளவுதான்....
எப்படியும் இது தனக்கான அழைப்பாகத்தான்  இருக்கும் என்று நினைத்து ரிப்போர்ட் பேப்பரை ஒரு கையில் எடுத்துக்கொண்டு... மறுகையில் ரிஸீவரை எடுத்தார்...

"எஸ் மேடம் என்று சொல்ல ஆரம்பித்தர்..." மறுமுனையிலிருந்து பேச ஆரம்பித்தது ஒரு ஆணின் குரல்...


"சார் இந்த மாசம் எத்தனை லீவ் வருதுன்னு சொல்ல முடியுமா" என கேட்டார் சபாபதி...
விடுமுறை என்றாலே சிறு பிள்ளை போல் சந்தோஷமாகிவிடுவார் சுகவனம்.

'அறிவிக்கப்பட்ட' + 'அறிவிக்கப்படாத' விடுமுறை + 'சுய' விடுப்பு என பல வகையிலும் விடுப்பு எடுக்க திட்டமிடுவார் சுகவனம்...

ஆனால் அவர் விடுப்பில் செல்லும் முன் நாள் வரையிலும்....
விடுப்பு எடுக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு வேலை செய்திருப்பாரோ அதை விட இரு மடங்கு வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையை "சுயமாகவோ" அல்லது தனது "நலம் விரும்பிகள்" மூலமாகவோ அடைவார்....

"ச்சே.. இதுக்கு பேசாம லீவே எடுக்காம இருந்திருக்கலாம்..." என அலுத்துக்கொண்டுதான் அவர் விடுப்பில் செல்வார்...

விடுமுறை பற்றி சபாபதி நினைவுபடுத்தியதுதான் தாமதம்... ரஞ்சனி கேட்ட ரிப்போர்ட்டை சுத்தமாக மறந்தே போனார் சுகவனம்...

"தனது நேரத்தை" மறந்து நீண்ட நேரம் விடுமுறை பற்றி சபாபதியிடம் பேசிக்கொண்டிருந்தார் சுகவனம்.

ரஞ்சனியும் உணவு இடைவேளை முடிந்து சிறிது நேரம் வேறு விஷயங்களில் ஈடுபட்டிருந்துவிட்டு... திடீரென நினைவு வந்தது போல் சுகவனத்திற்கு இண்டர்காம் மூலம் அழைப்பு விடுக்க முயற்சித்தாள்... ம்ஹூம்... இண்டர்காம் பிஸி.... அடுத்தடுத்து முயற்சித்து பலனில்லாததால் ரஞ்சனியின் "பிளட் பிரஷர்" முறையான கால இடைவெளியோடு உயர்ந்துகொண்டிருந்தது...

தனக்கு நேர இருக்கும் அபாயத்தை அறியாமல் சபாபதியோடு உரையாடிக்கொண்டிருந்தார் சுகவனம்...

சபாபதிக்கு சூழ்நிலை நன்றாகவே தெரியும்...

இருப்பினும் சுகவனம் ரஞ்சனியிடம் சென்று தனது வேலையை முடித்துவிட்டால், அடுத்து தனக்கான வேலைதான் என்று தெரிந்திருந்ததால், சுகவனத்தை அவர் அறியா வண்ணம் தடுத்து நிறுத்தி வைத்திருந்தார்....

அலுவலகத்தில் தேநீர் நேரம் வந்ததை அறிந்த சபாபதி, சுகவனத்தை போனிலிருந்து விடுவித்தார்...

சுகவனத்தின் தேநீர் அவரது இருக்கைக்கு வந்தது...
கையில் வாங்கி உதட்டருகே கொண்டு சென்றார்...
அந்த நேரத்தில் எதிர்பாராவண்ணம் இண்டர்காம் மணியடித்தது...
வழக்கம் போல் அலறியடித்த சுகவனத்தின் மீது தேநீர் சிந்தியது...

"ச்சே.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல...."
தேநீரை மேஜை மீது வைத்துவிட்டு போனை எடுத்தார் சுகவனம்..

"வேர் இஸ் தி ரிப்போர்ட் சுகவனம்..."  என ரஞ்சனி கேட்டாள்
"கமிங் மேடம்...." என்று சுகவனம் சொல்லி முடிப்பதற்குள் ரஞ்சனி போனை வைத்துவிட்டாள்...

"ம்... பதில் சொல்றதுக்குள்ள வைச்சாச்சு..."
"என் வார்த்தைக்கு "எங்கேயும்" மரியாதை கிடையாது..."

"எங்கேயும்" என்ற வார்த்தை பிரத்தியேகமாக "வீட்டையே" குறிக்கும்...
அதைக் கேட்ட சபாபதி நமட்டாக சிரித்தார்...
ரவி = "நோ ரியாக்ஷன்" வழக்கம்போல....
 
"எனக்கு மட்டும் ஏன்டா இப்படி..." என்று சொல்லிக்கொண்டே ரிப்போர்ட் பேப்பரை எடுத்துக்கொண்டு, முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் தேநீர் அருந்திக்கொண்டிருந்த ரவியின் கையை தட்டிவிட்டுச் சென்றார்...

வழக்கம் போல் ரிப்போர்ட்டை பார்த்ததும்... பொங்கி எழுந்த ரஞ்சனி 110 டெசிபலில் வார்த்தைகளை வீசினாள்... மூன்று முறை திருத்தங்களை சொல்லி... சுகவனத்தை செய்ய வைத்தாள்...

தானே அந்த ரிப்போர்ட்டை இறுதி செய்ததை நினைத்து தனக்கு தானே "குட்..." என்றாள் ....
தனக்குதான் சொல்கிறாள் என நினைத்து பெருமிதம் அடைந்தார் சுகவனம்....
சுகவனத்தின் எண்ணத்தை அறிந்துகொண்ட ரஞ்சனி சிரித்துவிட்டாள்...

அவ்வளவுதான் சுகவனம் பூரித்துப்போனார்...

ரஞ்சனியின் அறையிலிருந்து வெற்றிநடைபோட்டு  தனது இருக்கைக்கு வந்தார்...

"ப்பா... எதனை லட்சம்... ஜஸ்ட் கவனிக்கல... ஒரு வழியா முடிச்சாச்சு..." என்று ரவியிடம் சொன்னார்... ரவியோ தனது பார்வையை மட்டுமே பதிலாக சுகவனத்தை பார்த்தார்...

"ஏன்டா இப்படி வீட்ல இருக்கிற மாதிரியே.... எந்த ரியாக்ஷனும் இல்லாம உட்கார்ந்திருக்கே...

இது ஆபீஸ்டா....
பிரீயா இரு...

நான் என்ன உன் "மனைவியா ...."

பதில் பேசுனா நான் ஒன்னும் செய்யமாட்டேன் டா ...

சண்டை போட்ட கூட டிவேர்ஸ் பண்ண மாட்டேன்.... பண்ணவும் முடியாது...

.....தைரியமா பேசுடா ரவி...." (சற்றே அடங்கிய குரலில்)

 ரவியிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை...

"ம்ஹூம்....உன்ன பார்த்துட்டிருந்தா  நான் ரோபோட் மாதிரி ஆகிடுவேன்..."
 "டைம் ஆச்சு... நான் கிளம்பறேன்...." என்று
"அன்றைய சாதனையை" பெருமையோடு நினைத்துக்கொண்டே...
நேர் கொண்ட பார்வை... நிமிர்ந்த நன்நடையோடு... வீட்டிற்கு செல்ல ஆயத்தமானார் சுகவனம்

தொடரும்.... (....வீட்டில் சுகவனம்)