Tuesday, 25 December 2018

மிஸ்டர் சுகவனம் - பாகம் 10

சுகவனத்தின் "ஸ்மார்ட்" ஃபோன்

சுகவனத்தின் முன் வந்து நின்றார் தண்டபாணி....

"என்ன சார் பேசிட்டீங்க போல... லேசா கேட்டுச்சே...
3500 ரூபாய்ன்னு... காதுல விழுந்துச்சே...." என்றார் சுகவனம் ஆர்வத்துடன்...

"ஆ...ஆமா சார்... மேனேஜர்கிட்ட உங்க எதிர்ப்பார்ப்பை பற்றி எடுத்துச் சொன்னேன்... அவரும்  நல்ல ஐடியா கொடுத்தாரு..."
என சொல்லிக்கொண்டே அலமாரியிலிருந்த சுமார் 4800 ரூபாய்க்கு ஆரம்பித்து  இறுதியாக 3500 ரூபாய்க்கு விற்கக்கூடிய தகுதி வாய்ந்த
"Telkon - 'U will feel'" (டெல்கான் - யூ வில் ஃபீல்) மொபைலை எடுத்து வைத்தார் தண்டபாணி...

"என்னதிது?...... இதெல்லாம் வேணாம்பா... இதை எடுத்த இடத்திலேயே நைசா வச்சிடுங்க... நாம "சாம்சங் கேலக்ஸி ஏ9"லேயே என்ன பண்ணமுடியும்னு பாக்கலாம் வாங்க..." என்றார் சுகவனம்..

மறுபடியும் தண்டபாணியின் மனம் தடுமாற ஆரம்பித்தது....

"என்னடா இது... இந்தாளு மறுபடியும் முருங்கை மரத்திலே ஏறிட்டாரு...

திரும்பவும் மேனேஜர்கிட்ட போனா... திட்டுவாரு... வேற யார்கிட்டயாவது... இவரை தள்ளிவிட்டாலும்... அவனுக வியாபாரம் பண்ணிட்டா... அதை வெச்சே நம்மள கேவலப்படுத்துவானுங்க.... ச்.சே... இன்னைக்கு யாரு முகத்தில முழிச்சோம்... "
என்று தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டார் தண்டபாணி...


அதிகாலை எழும்போது உள்ளங்கைகளை ஒன்றாக வைத்து தேய்த்துவிட்டு அதில் கண் விழித்தால்... அந்த நாள் முழுவதும் நல்ல ஆற்றலோடு இருக்கலாம்... என்று ஒருவர் சொன்னதிலிருந்து அதையே வழக்கமாக வைத்திருந்தார் தண்டபாணி...

தனது உள்ளங்கையின் முழு ஆற்றலையும் உணரும் நாள் இது என்பதை தண்டபாணி அறிந்திருக்கவில்லை...

"என்னப்பா... இவ்ளோ யோசிக்கிற... அது என்ன... டெல்கானா... செல்கானா..? அத எடுத்து வச்சிட்டு வாங்க "சாம்சங் கேலக்ஸி ஏ9" விலையை எப்படி குறைக்கணும்னு சொல்லறேன் வாங்க..."

காசு நிறைய வைச்சிருக்கிறவங்க கிட்ட அதே விலைக்கு விக்கலாம் தப்பில்லே... நமக்கெல்லாம் அந்த விலை ஒத்துவராது.... நானும் உன்னை மாதிரிதான்ப்பா...." என்றார் சுகவனம்.. எப்படியும் தண்டபாணி தன்  வசமாகிவிடுவார் என்ற நம்பிக்கையோடு...

சுகவனம் சற்றும் எதிர்பாராத விதத்தில்...

"நான்  "சாம்சங் கேலக்ஸி ஏ9" எல்லாம் வாங்கமாட்டேன் சார்..." என்றான் தண்டபாணி...

சற்றும் தாமதிக்காமல்... "தெரியும்ப்பா... அதுக்கு அடுத்த மாடல்தான் வாங்குவீங்க..." என்றார் சுகவனம்...

உடனே.. தனது பேசிக் மாடல் ஃபோனை எடுத்து மேஜை மீது வீசுவது போன்ற பாவனையுடன் ஓசை வரும்படி போட்டார் தண்டபாணி...

அடுத்த வினாடி... தனது பாக்கெட்டில் ஒளிந்திருந்த தன் பேசிக் மாடல் ஃபோனை எடுத்து மெதுவாக தண்டபாணியின் ஃபோன் அருகே வைத்தார்...

சுகவனம்  வைத்திருந்த ஃபோனுக்கு குறைந்து, வேறு மாடல் இல்லை என்பது, மொபைல் ஃபோன் வியாபாரத்திலேயே இருப்பதால் தண்டபாணிக்கு தெளிவாக தெரிந்தது....

"தம்பி இந்த ஃபோனை எடுத்து உள்ளே வைங்க... உங்க டைட் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்லே இன்னொரு பெரிய ஃபோன்  தெரியுது பாருங்க... அது ஏ9-ஆ கூட இருக்கலாம்லே... சும்மா இப்படியெல்லாம் யோசிச்சு என்னை சமாளிக்க நினைக்காதீங்க..." என்றார் சுகவனம்

சொல்லிக்கொண்டிருக்கும்போதே சுகவனத்தின் நினைவில்... அவரது மேனேஜர் ரஞ்சனி திட்டியது நினைவுக்கு வந்தது...

"உங்க அறிவை பயன்படுத்தாதீங்க... நான் சொல்றதைமட்டும் செய்ங்க..."

ஆங்கிலத்தில்... "Don't use your brain... simply do what I say..?"


ரஞ்சனியிடம் வாங்கிய திட்டுகளிலேயே சுகவனத்திற்கு மிகவும் பிடித்த திட்டுகளுள் இதுவும் ஒன்று...

இந்த வாசகத்தை தண்டபாணியிடம் பயன்படுத்த முடிவு செய்த சுகவனம்...
"புத்திசாலித்தனமா செயல்படறீங்க... தண்டபாணி... ஆனா அதனால எந்த பிரயோஜனமும் இல்லை... நான் சொல்றதை மட்டும் செய்யுங்க..." என்றார்...,

தான் கற்றதை பயன்படுத்திவிட்ட திருப்தியுடன் (கற்றபின் நிற்க அதற்கு தக)...

"ச்..சே... பாக்கெட்லே இருக்கிறது "கேலக்ஸி ஏ9"ன்னு எப்படி கண்டுபிடிச்சாரு... ஆண்டவா... இப்படி மாட்டிக்கிட்டனே... எப்படி தப்பிக்கப்போறேன்னு தெரியலையே... முடிய பிச்சிக்கலாம் போல இருக்கே..." என்று மனமாற அவஸ்தை பட்டுக்கொண்டிருந்த தண்டபாணியிடம்...

"தம்பி "கேலக்ஸி ஏ9" எப்படி வாங்கணும்ன்னு எனக்கு தெரியும்... முதல்ல ஒரு பேப்பர் பேனாவை எடுங்க... "கேலக்ஸி ஏ9" ஃபோனையும் எடுங்க..." என்றார் சுகவனம்...

தண்டபாணிக்கு ஒன்றுமே புரியவில்லை... தன் பாக்கெடில் இருந்தது "கேலக்ஸி ஏ9" தான் என்பதை வெளியில் எடுக்காமலேயே கண்டுபிடித்ததிலிருந்து...  தன் சுய சிந்தனையை இழந்திருந்த தண்டபாணி
பேப்பர் பேனாவுடன் தயாரானார்...

"தேவைக்கு செலவு செய்யும் போது பிரச்சனை இல்லை.. ஆனா வசதிக்கு செலவு செய்யும் போதுதான் கஷ்டம்...
வசதிக்கும் வீணடிப்பதற்கும் செலவு செய்துதான் நம்ம நாட்டுல  விலைவாசியெல்லாம் இப்படி ஏறி இருக்கு..." என்றார் சுகவனம்...

தண்டபாணிக்கு, லேசாக புரிந்தது போலும் புரியாதது போலும் இருப்பது புரிந்தது....

"இப்படி விளக்கமெல்லாம் கொடுக்கறாரு... அடுத்து என்ன கேக்கபோறாருன்னு தெரியலையே..." என்று திகைத்து நின்றிருந்த தண்டபாணியிடம்....

"தேவை இல்லாத வீணான விஷயங்களை எடுத்திட்டாலே போதும்...
ஏ9... நமக்கு ஏத்த விலைக்கு வந்திடும்..." என்று முடித்தார் சுகவனம்...

 தண்டபாணியின் உடல்... பொருள்... ஆவி... எல்லாம் தனித்தனியாக தெரிந்தது...

"ஏ9"னோட டெக்னிக்கல் டீடைல் சொல்லுங்க..." என்றார் சுகவனம்...

"128 ஜி.பி. ஸ்பேஸ் (சேமிப்பு இடம்) 8 ஜி.பி. RAM இருக்கு சார்.." என்றார் தண்டபாணி..

"1 TB ஹார்ட் டிஸ்க்கே 3500 ரூபாய்க்கு உதைப்படுது தெரியுமா... 128 ஜி.பி. எதுக்குப்பா ஃபோனல..." என்றார் சுகவனம்...

"சார்.. குறைஞ்சது 30 படத்துக்கு மேல அதுவும் (HD)ஹச்.டி-ல  ஸ்டோர் பண்ணி வெக்கலாம் சார்.." என்று ஆர்வமாக சொன்னார் தண்டபாணி..

"ம்... ஸ்டோர் பண்ணிவச்சு... நான் போட்டிருக்கற லென்ஸோட பவர் என்னன்னு தெரியுமா... இதுக்குமேல பவர் ஏறுச்சினா லென்ஸ் கிடைக்காதுன்னு சொல்லிட்டாங்க... தவிரவும்... படமெல்லாம் தியேட்டர்ல பாக்கணும்... இதைவிட பெரிய ஸ்கிரீன்... வெறும் 120 ரூபாய்தான்... தலைக்கு பின்னால இருந்தெல்லாம் சவுண்ட் வருதுப்பா...தெரியுமா..."

அப்பாடா ... ஒருவழியாக முடித்துவிட்டார் என்று நினைக்க முற்பட்ட தண்டபாணியின் மனதில் சுகவனம் சொன்ன வார்த்தைகள்... பெரிய பாறாங்கல்லாய் வந்து விழுந்தது... தண்டபாணியின் ஆவி நிலைகுலைந்தது...

"அதனால அதை குறைச்சிடுங்க... எனக்கு அவ்வளவு ஸ்டோரேஜ் வேண்டாம்... 28 ஜி.பி. ஸ்பேஸ் 4 ஜி.பி. RAM-ஏ அதிகம்... "

"அடுத்து... கேமரா பத்தி சொல்லுங்க..." என்றார் சுகவனம்...

"24,10,8,5 எம்.பி.ன்னு 4 கேமரா இருக்கு... " என்று எவ்வித உணர்ச்சியுமின்றி சொன்னார் தண்டபாணி...

"என்னப்பா இது... டைலர் பேண்ட் அளவு சொல்ற மாதிரி சொல்ற... நான் என்ன சினிமா படமா எடுக்க போறேன்... சரி இந்த மாடலுக்குன்னு மரியாதைக்காக ஒரு 10 எம்.பி. கேமரா போதும்... கேமராவால  ஏகப்பட்ட பிரச்சனைப்பா... வெளியில சொல்ல முடியாது..." என்ற சுகவனம் தொடர்ந்து...

"சரி இப்போ நான் சொன்ன கான்பிகரேஷன்க்கு என்ன விலையாகும்னு சொல்லுங்க..." என முடித்தார்...

ஒரு நொடி ஸ்தம்பித்துபோனாலும் சுதாரித்துக்கொண்ட தண்டபாணி...
"சார் இதை பாருங்க... நீங்க சொன்ன கான்பிகரேஷன்தான் இந்த மாடல்ல இருக்கு... "Telkon - 'U will feel'" (டெல்கான் - யூ வில் ஃபீல்)" என்று ஒருவழியாக சுகவனத்தை சமாளித்துவிடலாம் என நினைத்து... அந்த ஃபோனை எடுத்து காண்பித்தார்...

"என்னைய்யா மடல் அது "யூ வில் ஃபீல்"... அப்படின்னா... வாங்கினப்புறம் ஏன்டா வாங்கினோம்னு ஃபீல் பண்ணுவோம்கிறத சிம்பாலிக்க சொல்லற மாதிரி இருக்கே...

அப்படியே பார்த்தாலும்... ஏ9 மாதிரி பெரிய டிஸ்பிளே (திரை) இல்லையே... " என்ற சுகவனம்...

"சரி... ஒன்னு பண்ணுங்க... அந்த டிஸ்பிளே எடுத்து இதுக்கு மாத்தி கொடுத்திடுங்க... வேணும்னா மேற்கொண்டு 500 ரூபாய் போட்டு மொத்தமா 4000 ரூபாய் கொடுத்திடுறேன்... அதே 100 செக் லீப் அப்படியே இருக்கு... 40 ரூபாய் ஒரு மாசதுக்கு... என்ன சொல்றீங்க?..." என்றார் சுகவனம்...

மீண்டும் ஒரு முறை  வெறுத்துப்போன தண்டபாணியின் ஆவி அவனது கூட்டிலிருந்து வெளியே வந்து அவனது உடலையும், மனதையும் ஏளனமாக பார்த்து சிரித்துவிட்டு மறுபடி உள்ளே சென்று ஒடுங்கிவிட்டது...
நிலைகுலைந்த தண்டபாணி... மேஜையை இறுகப் பற்றிக்கொண்டிருந்தார்...

பேசாம நாமளே காசு கொடுத்து வாங்கிகொடுத்திட்டு அப்புறம் 100 மாசத்துக்கான செக்க நாம வாங்கிக்கலாம் என்று அவன் மனம் யோசித்த அடுத்த க்ஷணம் அவனது அறிவு அலறியது...

"அடேய்... மடையா... என்ன யோசனை இது... இதை விட நீ வேலையை விட்டே போய்விடலாம்..." என்று... அசரிரீ போல் தண்டபாணிக்குள் கேட்டது...

"ஆம்... அதுதான் சரி... இன்னைக்கே ரிசைன் பண்ணறோம்... " என்று அவனது மனம் சிந்திக்க தயாரானது...

"ச்.சே... என்ன மானங்கெட்ட மனம் இது... எதை கேட்டாலும் ஆராயாமல் இப்படி ஓடுகிறதே..." என்று அவன் அறிவு, சிந்தனையை வீசியது...

"ஆமாமில்ல என்ன இப்படி புத்திகெட்டு சிந்திக்க ஆரம்பிச்சுட்டோம் என அவன் மனம், அவனது அறிவு வீசிய சிந்தனையை தொடர ஆரம்பித்தது..."

சிலையாக நின்றிருந்த  தண்டபாணிக்குள் ஓர் ஞான விசாரணையே நடந்துகொண்டிருந்தது...

ஓரளவு தண்டபாணியின் நிலையை அவனது இமைக்காத கண்கள், அசையாத உடல் மூலமாக புரிந்து கொண்ட சுகவனம்... மேற்கொண்டு ஏதாவது கேட்டல்... இவன் மூர்ச்சையாகி விழுந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பதை உணர்ந்து..

தண்டபாணியை தடுத்தாட்கொள்ள முடிவு செய்தார்...

மெதுவாக தண்டபாணியின் கைகள் மீது தனது கைகளை வைத்து... மெல்லிய குரலில்... "தம்பி... " என்றார்...

தண்டபாணியின் கண்கள் இமைக்க ஆரம்பித்தது...
கண்களில் தண்ணீர் நிரம்பி இருந்தது... நல்ல வேலை மதகுகள் எதுவும் உடையவில்லை...

நிரம்பிய தண்ணீர் மீண்டும் கண்களுக்குள்ளேயே சென்றுவிட்டது...

"தம்பி... என் தேவையை புரியவைக்கவே டைம் ஆகிடுச்சு... ஒன்னும் அவசரமில்லை... பொறுமையா உங்க மேனேஜர்கிட்ட பேசி... என்னோட தேவையை அவருக்கு புரியவைங்க... நான் நாளைக்கு வந்து பார்க்குறேன்..." என்று சொல்லிவிட்டு பதிலேதும் எதிர்பார்க்காமல் "பூர்ணவிகா"விலிருந்து வெளியேறினார்...

தண்டபாணி சுதந்திரமாக சுவாசிக்கலானார்...தற்காலிகமாக....

சொன்னபடியே அடுத்த நாள் "பூர்ணவிகா" வந்த சுகவனத்தின் கண்களில்... தண்டபாணி தென்படாததால், விசாரித்தார்... விசாரணையில், தண்டபாணிக்கு "குளிர் ஜுரம்..." விடுமுறையில் இருப்பதாக தெரிந்துகொண்டார்...

"சின்ன பையன்... இன்னும் அதனுபவம் போதலை..." என்று கிளம்ப எத்தனித்த சுகவனத்தை...

தண்டபாணியின் இந்நிலைக்கான காரணத்தை அறியாமல்...

"வணக்கம் சார்... நான் நாகராஜ்... தண்டபாணிக்கிட்ட கேட்டது என்னன்னு என்கிட்டே சொன்னா... நான் உங்களுக்கு உதவி செய்யறேன்..." என்றான் ...

நாலு பேரிடம் சொன்னால் தப்பில்லை... யாராவது ஒருவர் மூலம் தனக்கு தேவையான "சாம்சங் கேலக்ஸி ஏ9" ஃபோன் கிடைக்கும் என நம்பி... நாகராஜிடம் விளக்க ஆரம்பித்தார் சுகவனம்...

நாகராஜின் நிலை = ?...

தொடரும்...

Saturday, 15 December 2018

மிஸ்டர் சுகவனம் - பாகம் 9

சுகவனத்தின் "ஸ்மார்ட்" ஃபோன் தேடல்

நேரம் சரியாக மாலை 6.30....

ஏகப்பட்ட வணிக மையங்கள் மின் விளக்குகளால் தங்களை முன்னிலை படுத்திக்கொள்ளும் போட்டியில் முனைப்புடன் பிரகாசிக்க ஆரம்பித்தன...

அமாவாசை பௌர்ணமி என எந்த தொடர்புமில்லாமல் இரவில் பிரகாசிக்கக்கூடிய வீதிகள் அவை...

"ப்...பா... எவ்ளோ லைட்ஸ்..., எவ்ளோ கரண்ட் பில் வரும்... நம்ம 5 நிமிஷம் ஃபேன் ஆஃப் பண்ணாம விட்டாலே அரை மணி நேரம் கிளாஸ் எடுப்பா...
இங்க எப்படி?!... யாருக்குமேவா கல்யாணமாகியிருக்காது?!..."
என பிரமித்துக்கொண்ட சுகவனம் ஒருவழியாக "பூர்ணவிகா" கடை முன் பிரவேசித்தார்...

முழுக்க கண்ணாடி, கதவு எது சுவர் எது என கண்டறிய முடியாத வண்ணம் திறம்பட அமைத்திருந்தனர்...

இதுதான் கதவு என கண்டுபிடிக்க வசதியாக கண்ணாடியிலேயே வட்ட வடிவிலான பூ வேலைப்பாடு கொண்ட கைப்பிடி... அதனருகில் "PULL" என்ற வாசகம் ஒட்டப்பட்டிருந்தது...

வழக்கம்போல் சுகவனம் அதைப் பார்த்து "புள்"னா "தள்"ளு... அதானே  ரைமிங்கா வருது என முடிவு செய்து, சற்றே கம்பீரத்தோடு "புள்"ளினார்  (தள்ளினார்)
ம்...ஹும்... லேசான கிரீச் சத்தத்தோடு நின்றது...
தன்னுடைய கம்பீரமான கட்டளைக்கு அடிபணியாத அந்தக் கண்ணாடிக்  கதவை மேலும் கீழும் முறைத்துப் பார்த்தார்.....

உள்ளே இருந்த "பூர்ணவிகா" பணியாள்... புரிந்துகொண்டு...  உள்ளிருந்து கதவை தள்ளி சுகவனத்தை "வண்க்கம்" என தமிளில் கூறி வரவேற்றார்...

"ம்...அதென்ன நீங்க தள்ளினா மட்டும் திறக்குது... நாங்க தள்ளினா திறக்காதா?... கஸ்டமர்தான் பாஸ் முக்கியம்.... கஸ்டமருக்கு ஏத்தமாதிரி கதவை மாத்துங்க... உங்களுக்கு நாங்கதான் முக்கியம்...." என கூறிவிட்டு எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் மிடுக்காக உள்ளே நடந்து சென்றார்....

வினோத் காண்பித்த "சாம்சங் கேலக்ஸி ஏ9" மனதில் வைத்துக்கொண்டு அனைத்தையும் நோட்டமிட்டார்.....

பிறகு மெதுவாக ஒரு விற்பனையாளரை தேர்ந்தெடுத்த சுகவனம்....
" உங்க பேரு தம்பி...." என கேட்டார்...
"தண்டபாணி... சார்..." என்றார் அந்த விற்பனையாளர்...
"தண்டபாணி சார்... என்பது முழு பேரா... வித்தியாசமா இருக்கே..." எனச் சொல்லி... உரக்க சிரித்தார்....
"சும்மா தமாஷ்...." என்று லேசாக கண் சிமிட்டினார்... தன்னுடைய ஹாஸ்ய உணர்வை வெளிப்படுத்திவிட்டதாக நினைத்து...


"ம்...இருக்குற பிரச்னை போதாதுன்னு இது வேறயா..." என நினைத்துக்கொண்டு... வேறு வழியின்றி லேசான புன்னகையை  உதிர்த்தார் தண்டபாணி...

சற்றே யோசிப்பது போன்று.... யோசித்து
"...சாம்சங்.... கேலக்ஸி.... ஏ9... எவ்ளோ ஆகுது..." என கேட்டார் சுகவனம்

ஃபோனை எடுத்து சுகவனத்தின் முன் வைத்த தண்டபாணி

"முப்பத்தி ஆறாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறு ரூபாய் சார்..." என்றார் தண்டபாணி

ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போன சுகவனம்...
"ஒரு ஃபோனோட விலையா ... எதனால...?..." என்றார் சுகவனம்

"லேட்டஸ்ட் மாடல் சார், எல்லா டெக்னாலஜியும் இதுல இருக்கு சார்..." என்றார் தண்டபாணி

 சற்றும் எதிர்பாராத வண்ணம்... சிறிதும் யோசிக்காமல்...
 "வாயில தானே பேசணும்..." என கேட்டுவிட்டார் சுகவனம்

"சார்..." என்று திகைத்து நிறுத்தினார் தண்டபாணி

"இல்லப்பா... மனசுல நினைச்சாலே இதுவே கால் பண்ணி நினைக்கிறத.. நினைக்கிற ஆள்கிட்ட சொல்லிடுமோ!...
அப்படி ஏதாச்சும் ஆச்சுன்னா.. குடும்பத்தில பிரச்னை ஆகிடும்பா...
வம்பை விலை கொடுத்து வாங்கினமாதிரி ஆகிடும்..."

"சரிங்க சார் உங்க பட்ஜெட்டை சொல்லுங்க... அதுக்கேத்தமாதிரி ஃபோனை காட்டுறேன்..." என்றார் தண்டபாணி

"ஹலோ... எனக்கேத்தமாதிரியான ஃபோனை நான்தான் செலக்ட் பண்ணனும்... நீங்க சொல்லக்கூடாது... புரியுதா..." என்றார் சற்றே கடினமான குரலில்...

தான் சரியாக 'தவறான' ஆளிடம் சிக்கியிருப்பது புரிய ஆரம்பித்தது தண்டபாணிக்கு...

மௌனமே சரியான வழி என நினைத்து அமைதியாக இருந்தார் தண்டபாணி...

"...இப்படியே எவ்ளோ நேரம்பா ரெண்டு பேரும் அமைதியா இருக்கிறது... நாம என்ன லவ்வர்ஸ் பார்க்லயா இருக்கோம்..." எனக் கூறி அங்கு நிலவியிருந்த அமைதியை மட்டுமல்லாமல் விற்பனையாளர் தண்டபாணியின் குழப்பத்தையும் கலைத்தார் சுகவனம்...


"முடிவா வாங்குற மாதிரி ஒரு விலையை சொல்லுப்பா..." என்றார் சுகவனம்...

"சார்... இது பிராண்டட் ஃபோன்... கடைசியா... 35800 ரூபாய் கொடுங்க சார்..." என்றார் தண்டபாணி

"என்னப்பா இது வாங்குற மாதிரி கேட்டா... " என இழுத்தர்  சுகவனம்...

"சார்... ஃபுல் கேஷா இல்ல... இ.எம்.ஐ யா சார்..." எனக் கேட்டார் தண்டபாணி

"என்னப்பா நீ ஏதோ 1000... 2000... சொன்னா பரவாயில்ல...கேஷ் கொடுத்து வாங்கலாம்...
ஒரேயடியா என் ஒன்றரை மாச சம்பளத்தையே கேக்குறயேப்பா ...
இ.எம்.ஐ தான்..." என்றார் சுகவனம்

"சரிங்க சார் இனிஷியல் அமௌன்ட் எவ்ளோ கட்டறீங்க?..." என கேட்டார் தண்டபாணி...

"அதான் மாசாமாசம் இ.எம்.ஐ கட்டப்போறேனே... அப்புறம் எதுக்கு இனிஷியல் அமௌன்ட்...
நல்லா கேட்டுக்கோங்க...
என்னுடையது சேலரி அக்கௌன்ட்...
ரெண்டு செக் புக் அப்படியே இருக்கு... 100 செக் லீஃப் ...
இப்பவே கையெழுத்து போட்டு கொடுத்துடறேன்...
100 இ.எம்.ஐ எவ்ளோ வருதுன்னு உங்க அக்கவுண்ட்டண்ட் கிட்ட கேட்டு சொல்லுங்க... சீக்கிரம்...

35800 ரூபாய்ன்னா... மாசம் 385 ரூபாய் வரும்...
நானும் அக்கவுண்ட்ஸ் எல்லாம் பார்ப்பேன்... " என்று பெருமிதமாக சொல்லி முடித்தார் சுகவனம்.

... ஒரு நிமிடம்...  தண்டபாணியின் உடல், மனம் இரண்டும் முதல்முறையாக ஒரே நேரத்தில் ஸ்தம்பித்துப் போனது...

தான் கனவுலகத்தில்தான் இருக்கிறோம்... கடவுளே... இது நிஜம் அல்ல...
என தண்டபாணியின் மனம் நினைத்தது... "358 ரூபாய்" தண்டபாணியின் காதுகளுக்கும் மூளைக்கும் இடையே சிக்கி சுற்றிக்கொண்டிருந்தது....

இது கனவல்ல... நிஜம்... என்பது புரிய சில நொடிகள் ஆனது தண்டபாணிக்கு...

தண்டபாணியின் மனமும் உடலும் வழக்கம் போல் தனித்தனியாக செயல்பட ஆரம்பித்தது...

"சார் ஒரு நிமிஷம்... தண்ணி குடிச்சிட்டு வரேன்..." எனச் சொல்லி அவரிடமிருந்து விடுபட்டு சென்றார் தண்டபாணி...

நேரே மேனேஜர் அறைக்கு சென்ற தண்டபாணி... நடந்ததை மேனேஜரிடம் பரிதாபமாக சொன்னார்...

"என்ன தண்டபாணி... வந்திருக்கிற கஸ்டமரை சமாதானப்படுத்தி ஏதாவது வியாபாரம் பண்ணுவீங்களா... அத விட்டுட்டு என்கிட்டே வந்து கம்பிளைன்ட் பண்றீங்க..." என்ற மேனேஜர் தொடர்ந்து ...

 "போங்க போயி... அந்த 3500 ரூபாய் விலையிலான ஃபோனை காட்டி முடிங்க... நமக்கும் அதுலதான் நல்ல மார்ஜின் கிடைக்கும்..." என முடித்தார்.

மேனேஜரிடம் உபதேசம் வாங்கிக்கொண்டு வெளியே வந்த தண்டபாணியை பார்த்த சுகவனம், தனக்காக ஏதோ பெரிய தள்ளுபடி விலையை தரப்போகிறார் என நினைத்து புன்னகைத்தார்.....

எப்படியும் இந்த ஆளிடம் ஏதாவது ஒரு ஃபோனை வியாபாரம் செய்துவிட வேண்டும் என்ற உறுதியுடன்...
சுகவனத்தின் சுய ரூபம் தெரியாத...தண்டபாணி அவரை நோக்கி லேசான புன்னகையுடன் வந்தார்...

தொடரும்....

Tuesday, 4 December 2018

மிஸ்டர் சுகவனம் - பாகம் 8

சுகவனத்தின் "ஸ்மார்ட்போன்" தேடல்

ஆழ்ந்த உறக்கத்திற்கு பின், குழந்தை மனதுடன் விழித்தெழுந்தார் சுகவனம்.... மனதில் எந்த ஒரு குழப்பமோ, சஞ்சலமோ, அவசரமோ, பதற்றமோ இல்லை....

அடுத்த இலக்கு அலுவலகம் கிளம்புவது....

வழக்கம்போல் தனது அதிகாலை யுத்தங்களை முடித்துவிட்டு... காலை உணவருந்த வந்தமர்ந்தார்.... புவனா பரிமாறினாள்...

தனது வழக்கமான பாணியிலேயே பயணப்பட்டு அலுவலகம் வந்தடைந்தார்...

காலையிலேயே ஒரு ரிப்போர்ட் வாங்க வினோத் சுகவனத்தின் இருக்கை அருகே காத்திருந்தான்...


வினோத் கையில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன், ஆழ்ந்த சிந்தனையோடு தனது விரல்களால் ஸ்மார்ட்போனின் திரையை மேலும் கீழுமாக தள்ளிக்கொண்டிருந்தான்...

"புது போனா... தெரியுது... அதை எதுக்கு என் முன்னாடி வச்சு கொஞ்சிக்கிட்டு இருக்கே...." என்றார் சுகவனம்

"இல்ல... சுகு... ஒரு கஸ்டமர் போன் நம்பர் கொடுத்தாரு... இதுலதான் ஸ்டோர் பண்ணி வச்சேன்... இப்ப காணல..." என்றான் வினோத்

"முதல்ல... போன் நம்பர் ஸ்டோர் பண்ண கத்துக்கிட்டயா... ஸ்மார்ட்போன் வாங்கிட்டா மட்டும் போதுமா... எப்பவுமே பேப்பர் பேனாதான் பெஸ்ட்..." என்றார் சுகவனம்...

"சும்மா அதையே சொல்லாதீங்க சுகு... உங்களால வாங்க முடியல... இதெல்லாம் சயின்ஸ்... டெவலப்மென்ட்...  " என்றான் வினோத், சுகவனத்தின் கிண்டல் பேச்சை நிறுத்துவதற்காக...

"காசு இருந்தா போதுமா?... அறிவியலை பயன்படுத்தனும்னா அறிவிருக்கணும்...." என்று சற்றும் யோசிக்காமல்... உண்மையை போட்டுடைத்த சுகவனத்தின் பேச்சை கேட்டு வினோத் திகைத்துபோனான்...

அன்றைய முன்தினம் வினோத் அவசரத்தில் கஸ்டமர் கொடுத்த போன் நம்பரை டைப் செய்தானேயொழிய அதை பதிவு செய்ய மறந்து போனான்.... கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினான்...

"இதுக்கெல்லாம் கோபப்பட்டா எப்படிப்பா.. வா வினோத்.." என்று பிடித்து நிறுத்தினார்...

சுகவனம் சொன்னதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்ற எண்ணத்துடன் வினோத்தும் நின்றான்...

"நீங்க ஏன் ஸ்மார்ட்போனுக்கு மாறக்கூடாது..." என்றான் வினோத் மெதுவாக...
"இப்ப இ.எம்.ஐ.  வசதியெல்லாம் இருக்கு சுகவனம்.." என்று முடித்தான்..

"இது என்ன போன்? எவ்வளவு....?" என்று கேட்டார் சுகவனம்..

"இது 'கேலக்ஸி ஏ9'..." என்றான் முணுமுணுத்தபடி...

"ம்...ஆஹ்... ஆஹ்...ம்... என்னது..." என்றார் சுகவனம்

தான் சரியான பெயரைத்தான் சொல்கிறோமா என்ற சந்தேகத்துடன் அந்த போனை முன்னும் பின்னும் சுழற்றி பார்த்துவிட்டு...

"சாம்சங் கேலக்ஸி ஏ9" என்றான் சத்தமாக...

"நான் 3000 ரூபாய்தான் கொடுத்தேன்... மிச்சம் இ.எம்.ஐ. போட்டுட்டேன்..." என்றான் வினோத்...

மேற்கொண்டு அவனிடம் விலையை கேட்க சுகவனத்திற்கு விருப்பமில்லை.
நாமளும் இன்னைக்கு சாய்ந்திரம் அலுவலகம் முடிந்தவுடன் கடைக்கு போறோம்... வாங்குறோம்... என்று முடிவு செய்தார்...

அலுவலகத்தில் 24 மணி நேரமும் இன்டர்நெட் வசதியுள்ள கணினி சுகவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது...

"ஏன் சாய்ந்திரம் வரைக்கும்... இப்பவே... ஆன்லைன்ல எது லேட்டஸ்ட் மாடல்னு ஏன் ஆராயக்கூடாது..."

உடனே கணினி முன் அமர்ந்த சுகவனம்... "வலைதளத்தினுள் விழுந்தார்...."

முதல்ல எந்தக் கடையிலே நல்ல பிராண்ட் போன்கள் நிறைய இருக்குன்னு பார்ப்போம்... என முடிவு செய்தார்...

எந்த கடையிலும்  நல்ல பிராண்டை விட... அவர்களுக்கு நல்ல லாபம் தரும் பிராண்டையே 'வற்புறுத்தி' (அதாவது.. அதன் பெருமைகளை எடுத்துச்  சொல்லி) விற்பார்கள் என்ற வியாபார உத்தியை சுகவனம் அறிந்திருக்கவில்லை...

சிட்டியிலேயே அதிக கிளைகள் கொண்டது "பூர்ணவிகா"  மட்டுமே...
ஆங்கிலத்தில்... POORNAVIKA... Your Mobile... Our choice...
தமிழில்...  பூர்ணவிகா.... உங்கள் மொபைல்... எங்கள் சாய்ஸ்...
என்ற தாரக மந்திரம் அவர்களுடையது...
வருடத்திற்கு ஒரு நடிகை அழகாக (......!?) அதற்க்கு விளம்பர மாடலாக இருப்பார்கள்....

சுகவனமும் "பூர்ணவிகா" வலைதளத்தினுள் பிரவேசித்தார்....

கணினி முன் அவர் அமர்ந்தபோது மதியம் சுமார் 1.30 மணி இருக்கும்...
ஆராய்ச்சி முடியாத நிலையில் அவரது கண்கள் எரிய ஆரம்பித்தது...
"டீ ரெடி ஆகிடுச்சு சார்..." என்று தூரத்தில் ஒரு குரல் கேட்பது போல இருந்தது...

உள்ளுணர்வில் ஏதோ ஒரு  எண்ணம் தோன்றி மணி பார்த்தார் - மாலை 4.15 ஆகி இருந்தது...

சுகவனத்திற்கு சிரிப்பு பொங்கியது... தனியாக சிரித்தால் வேறு மாதிரி ஆகிவிடுமே என்கிற எண்ணத்துடன் திருதிருவென முழித்துக்கொண்டிருந்தார்....

அந்த நேரம் அங்கு வந்த வினோத்... "என்ன சுகு....என்னாச்சு..."என்றான்...

"ஒண்ணுமில்லடா எந்த போன் இப்ப விலை குறைவாகவும் நல்ல தரமாகவும் இருக்குதுனு நெட்ல தேடிட்டிருந்தேன்...." என்றார் சுகவனம்

"கண்டுபிடிச்டீங்களா..." என்றான் வினோத்

அவ்வளவுதான்.... சுகவனம் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்... கண்களில் தண்ணீர் வரும் வரை சிரித்து தீர்த்தார்..

"அதைத் தவிர பாக்கி எல்லாத்தையும் கண்டுபிடிச்சிட்டேன்..." என்றார் சிரிப்புக்கிடையே...

"பாக்கி எல்லாத்தையும்னா?..." என்றான் வினோத்

"ஒவ்வொரு போனுக்கும்  ஒவ்வொரு நடிகை விளம்பரம் பண்ணறாங்க...
அவங்கள பத்தின லேட்டஸ்ட் கிசுகிசு வரைக்கும்... எல்லாத்தையும் படிச்சிட்டேன்..." என்றார்.... அவரை நினைத்து அவரே சிரித்துக்கொண்டு...

"சரி நான் கிளம்புறேன்!..." எனச் சொல்லி கிளம்பினான் வினோத்

"ச்.. சே.... வலைத்தளம்னு சரியாத்தான் பேர் வச்சிருக்கானுங்க... எப்படி சிக்குனேன்னு எனக்கே தெரியல... "பூர்ணவிகா" வலைதளத்துக்கு உள்ளே போனோம் அங்கிருந்து எப்படி வெளியிலே போனோம்?...ச்சே...." என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டு.....

"சரி... இனிமேலயாவது கொஞ்சம்... வேலைய பார்ப்போம்...
வாங்குற சம்பளத்துக்கு உண்மையா இருக்கணும்... " என்று தன் வழக்கமான நையாண்டி பாணியிலே நினைத்துக்கொண்டு வேலையை தொடர்ந்தார்...

நேரம் மாலை 5.30....

"சரி... கிளம்பி நேரா "பூர்ணவிகா" போறோம்... மொபைல் போன் வாங்குறோம்... " என்று கிளம்பினார் சுகவனம்...

இம்முறை சுகவனத்தால் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றி "பூர்ணவிகா" விற்பனையளருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...


தொடரும்...