Wednesday, 21 November 2018

மிஸ்டர் சுகவனம் - பாகம் 6

... சுகவனத்தின் திருமணம் 


ஒருவழியாக எண்ண அலைகளிலிருந்து விடுபட்ட சுகவனம்... கை கால் அலம்பி ஹாலுக்கு வந்தார்... அமர்ந்த கையோடு டி.வி.யை  ஆன் செய்தார்...
ஆன் செய்யும் உரிமை மட்டுமே  அவருக்கு உண்டு... ரிமோட் கன்ட்ரோல் புவனாவிடம்...

டி.வி. மட்டுமல்ல சுகவனத்தை ஆட்டுவிக்கும் ரிமோட்டும் அவளிடமே...
அவரது 31 வயதில்... தனது கட்டுப்பாட்டை (அதாவது......) புவனாவிடம் இழந்தார்...

ஹாலுக்கு வந்ததும் டி.வி.யை  ஆன் செய்ததற்கு காரணம்... மேற்கொண்டு புவனா தன்னை கேவலப்படுத்திவிடுவாளோ என்ற அச்சம்...

ஆனால் புவனா அப்படியல்ல, தேவையில்லாமல் சுகவனத்தை கேவலப்படுத்தமாட்டாள் ...
எப்போதாவது சுகவனம் தன்னை ஒரு புத்திசாலியாகவோ அல்லது அதிமேதாவியாகவோ நினைத்துக்கொண்டு பேசினாலோ, செயல்பட்டாலோ தவிர ... மற்ற நேரங்களில் சுகவனத்திற்கு கட்டுப்பட்ட மனைவியாகவே இருப்பாள்.

புவனா பேசும் போது சிலநேரங்களில் சுகவனத்திற்கு சிரிப்பு வந்துவிடும்... அப்படி சிரித்துவிட்டால் போதும்... முடிந்தது சுகவனத்தின் கதை....
அதனால் அவரது சிரிப்பின் காரணம் தெரியாத வண்ணம் டி.வி.யை  ஆன் செய்துவிடுவார்...

அன்றும் அப்படியே... டி.வி.யை  ஆன் செய்துவிட்டு இரவு உணவருந்த அமர்ந்தார்...  உணவருந்திவிட்டு "வாக்கிங்" செல்வதாக சொல்லி பக்கத்து தெருவிலிருக்கும் டீ கடையில் தனக்கு பிடித்த காபி குடித்துவிட்டு வந்து படுத்துவிடுவார்.

சுகவனம் ஒரு காபி பிரியர்... அவரது நிச்சயதார்த்தம் முடிந்ததுமே அவர் காபியை இழந்துவிட்டார்...
ஆனால் அதை அவர் உணர்வதற்கு திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆனது...

உறக்கத்தை எதிர்பார்த்து படுத்திருந்த சுகவனம்.....


"ப்பா... இப்போ எவ்ளோவோ மேல்... கல்யாணமான புதுசுல ஆசையா மனைவி கையால காபி கேட்டு அனுபவித்ததை நினைத்துப்பார்க்க புத்தி அஞ்சினாலும்...  மனம் விடவில்லை நினைவலைகளை ஓடவிட்டது..."

சுகவனத்திற்கு புவனாவை நிச்சயம் செய்வதற்கு முன் ஏழு இடத்தில் அவரது பெற்றோர்கள் பெண் பார்க்கும் படலத்தை நடத்தி முடித்தனர்... இந்த விஷயத்தில் சுகவனம் தெளிவாக இருந்தார்...
"பெண் பார்க்க நான் வரமாட்டேன்... போட்டோ... காட்டுங்கள் சொல்லிவிடுகிறேன்..." என்றார்.
ஏழு பேரையும் சரி என்றே சுகவனம் சொல்லி இருந்தார்... ஆனால் அவரது பெற்றோர்கள் ஏதேதோ கரணங்கள் சொல்லி தவிர்த்தனர்... எட்டாவதாக  புவனாவின் போட்டோவை காட்டும்போது...
"சும்மா சும்மா போட்டோ காட்டாதீங்க... 'எல்லா விஷயத்தையும்' முடிச்சிட்டு என்கிட்டே வாங்க..." என்று கடிந்துவிட்டார்....

இதுவரை அவர் பார்த்த ஏழு போட்டோக்களை விட புவனாவின் போட்டோ ஏதோ வித்தியாசமாக இருந்தது....
மற்ற அனைவரும் ஸ்டுடியோவில் போட்டோ எடுத்திருந்தனர்.. ஆனால் புவனாவின் போட்டோ மட்டும் அவள் வீட்டு தோட்டத்தில் இருந்த தென்னை  மரங்களுக்கிடையே எடுக்கப்பட்டிருந்தது...

சுகவனத்தால் இதை யூகிக்க முடியவில்லை... போட்டோவை அவரிடம் கொடுத்த அவரது பெற்றோர்....
"பொண்ணு நல்ல உயரம்..." என்றனர்

பொண்ணு உயரமா இல்லை தெண்ணை மரம் உயரமா என புரியாமல்.... போட்டோவை 5 நிமிடம் உற்று பார்த்துக்கொண்டிருந்த சுகவனதிற்கு...
6வது நிமிடம், வழக்கமாக ஒரு ஆணுக்கு ஏற்படக்கூடிய குழப்பம் ஏற்பட்டது...

அவ்வளவுதான் புவனா சுகவனத்திற்கு பிடித்துப்போனாள்...
காரணம்?... இன்று வரை தெரியாது... எல்லாமே அந்த 5 நிமிடம் செய்த மாயம்...

நிச்சயதார்த்தம் முடிந்தது....

அதன் பிறகு தன் வீட்டிற்கு தெரியாமல் புவனாவை அவளது வீட்டில் சந்தித்தார் சுகவனம்.... முதல் முறை உப்பு போட்ட காபியும், அடுத்த முறை சர்க்கரையே  இல்லாத காபியையும் அருந்தும் பாக்கியம் பெற்றார்...

என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை... அப்போதெல்லாம் காபியின் ருசி அறியும் திறன் இல்லாமல்.... சுதி... மதி...இழந்து சுற்றிக்கொண்டிருந்தார்...

ஒருவழியாக திருமணம் முடிந்தது...

இரண்டு நாட்கள் கலகலப்பாக ஓடியது....

குறிப்பு:
புவனாவுக்கும், சுகவனத்தின் அம்மா சிவகாமிக்கும் ஏற்பட்ட "ஆழ்ந்த நட்புறவை" பின்பு ஒரு தனி தொடராக எழுத முயற்சிக்கிறேன்...

மூன்றாவது நாள் அதே நிகழ்வு...

நான்காவது நாளும் அதே நிகழ்வு...

கை நடுக்கத்துடன் காபி டம்பளரை வாங்கினார் சுகவனம்... மனதிற்குள்  "இறைவா... அப்படி இருக்க கூடாது...
நேற்று எனக்கு நாக்கு சரியில்லை... அதான்...
காபி நல்லாத்தானிருக்கும்... இருக்கணும்..." என்று நினைத்துக்கொண்டே டம்பளரின் உதடுகளில் தனது உதடுகளை பதிய வைத்தார்...

ஒரு நிமிட சிந்தனை...
காபியை உறிஞ்சி கண்களை மூடி ருசிப்பதா அல்லது... கண்களை மூடிக்கொண்டு குடித்துவிடுவதா என்ற மன சஞ்சலத்தின் இறுதியில் மனோதிடத்துடன்  காபியை உறிஞ்சினார்...

சுகவனம் மனதிற்குள்...
"ஐயோ... என்ன இது... இப்படி இருக்கிறது..." என்று நினைத்து
கண்களை திறந்து டம்பளரினுள் பார்த்தார்...
"நான் யாரு எனக்கே தெரியலையே..." என்ற பாடல் போல அந்த திரவத்தை மறைத்திருந்த நுரையை ஊதினார்... 
வாசனை மட்டும், தான் வழக்கமாக வாங்கிவரும் காபி தூளை நினைவுபடுத்தியது...

"இது என்ன திரவம்னே தெரியலையே..."

"ம்... மூக்கிற்கு எட்டிய வாசனை நாக்கிற்கு எட்டலையே" என நினைத்துக்கொண்டு...

தன் வாழ்நாளில் இப்படி ஒரு காபியை அருந்தியதில்லை..
எப்படி தயாரித்திருப்பாள், என்ற ஆச்சர்யத்துடன் ஆராய ஆரம்பித்தார்...

"சரி நாளைக்கு அவ வீட்டுக்கு போறோமில்லை அங்கேயும் ஒரு முறை காபி போடச் சொல்லி செக் பன்றோம்..." என நினைத்துக்கொண்டார்...

அடுத்த நாள் புவனாவின் வீட்டிலும் குடித்து பார்த்தார்... ம்.ஹும்... தன வீட்டில் அனுபவித்த அதே தண்டனைதான்...

நிச்சயதார்த்தம் முடிந்து இரண்டு முறை அவள் வீட்டில் காபி குடிச்சிருக்கோம்... ஆனா ருசி ஞாபகமில்லையே... ச்சே... அவ்வளவு சுரனையற்று திரிஞ்சிருக்கோமே என நினைத்து...
"ம்... இதுக்கு மேல ஒன்னும் செய்யமுடியாது..." என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டார்...

சரி இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று தீவிரமாக யோசிக்கலானார் சுகவனம்...

இனிமேல் காபி குடிப்பதை நிறுத்திவிடுவது என்ற முடிவுக்கு வந்தார்...
காரண உபயம்... "பித்தம்".... என்று சொல்லி தப்பித்து...

"உடல் நலம் காக்க..." எனச்  சொல்லி காலையில் "வாக்கிங்" என்ற பெயரில் வெளியில் சென்று கடையில் காபி குடிக்கலாம் என்ற வழிமுறையை கண்டுபிடித்தார்...

பின் விளைவுகளை யோசிக்காமல்...
 தொடரும்.... 

No comments:

Post a Comment