...வீ(வி)ட்டில் சுகவனம்
மேலதிகாரி ரஞ்சனியிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சுகவனம் அன்றைய பொழுதில் தான் எதையோ சாதித்துவிட்டதை போல் எண்ணி,
நேர் கொண்ட பார்வை... நிமிர்ந்த நன்நடையோடு...வீட்டினுள் நுழைந்தார்...
நுழையும்போதே பரபரப்புடன் கைககள் சட்டை பட்டன்களை கழற்ற... காலிலிருந்த செருப்புகளை அப்படியே உதறியவாறு உள்ளே நுழைந்தார்..
நேரே பெட்ரூம் சென்ற சுகவனம் ஃபேன் ஸ்விட்ச்சை போட்டார்... தன்னுடைய விரலசைவில் ஃபேன் சுழல்வதை நினைத்து பெருமிதம் அடைந்தார்.
"அதானே சுத்திதானே ஆகணும்...." என்று முணுமுணுத்தார்...
சுகவனத்தின் மனைவி, புவனேஸ்வரி - அபார அறிவு - எல்லா மனைவிகளையும் போல்...
சுகவனத்திற்கு ஏற்ற ஜோடி...
எதிர் எதிர் துருவங்கள் ஒன்றோடொன்று ஈர்ப்புடையது என்பது இயற்பியல் - அந்த இயல் மனித குலத்திற்கும் உண்டென்பது இயற்கை...
கணவன் நடந்து வரும் காலடி சத்தத்தை கொண்டே.. இப்படி நடந்தால் செருப்புகள் எப்படி இருக்கும், வாசலில் போட்டுவைத்திருந்த மேட் எப்படி நகர்ந்திருக்கும், அடுத்து எப்படி அவர் அணிந்திருக்கும் ஆடைகள் களைந்து வீசுவார் என்று எல்லா மனைவிகளையும் போல் எளிதாக யூகித்துவிடுவாள் புவனா.
அன்றும் அதுபோலவே நடந்தது...
ஃபேன் காற்றை அனுபவித்தவாறே... "உஸ்ஸ் ..." என்று காற்றை ஊதுவது போல் இன்றைய அலுவலக சவால்களை ஊதிவிட்டதாக எண்ணி சட்டையை கழற்றி பெட் மீது வீச துணிந்தார்...
சமையலறையிலிருந்து குரல் வந்தது....
"சட்டைய ஹங்கேர்ல மாட்டுங்க...." என்றாள் புவனா....
ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனார் சுகவனம்...
அவளுக்கு எப்படி தெரியும்... ஒரு வேல... கேமரா ஏதும் வைச்சிருப்பாளோ என யோசிக்கலானார்...
அலுவலகத்தில்தான் விட்டுட்டோம்... அந்தம்மா கிட்ட தலைகுணிய வேண்டியதாயிடுச்சு.... வீட்ல விடக்கூடாது என மனதிற்குள் நினைத்துக்கொண்டார்....
சமையலறையிலிருந்து புவனா வந்தாள்... பேசிக்கொண்டே....
"ஏன் செருப்ப அப்படி எறிஞ்சிட்டு வந்திருக்கீங்க?..."
"ஏன் மேட் அப்படி நகர்ந்திருக்கு?... "
"சட்டைய கழட்டுனா ஹங்கேர்ல மாட்ட வேண்டியதுதானே ?...."
"வெளியில போயிட்டு வந்தா, கை காலெல்லாம் கழுவிட்டு வர வேண்டியதுதானே..."
"சின்ன பிள்ளைக்கு சொல்லற மாதிரி தினமுமா சொல்லுவாங்க?..."
அடுத்தடுத்த கேள்விகளால் அதிர்ந்து போனார் சுகவனம்...
விழி பிதுங்கி நின்ற சுகவனத்தைப் பார்த்து...
"ம்.... இதுல ஒன்னும் குறைச்சலில்ல..." என முடித்தாள் புவனா...
எப்படியும் இன்று விட்டுக்கொடுப்பதில்லை என்று முடிவு செய்த சுகவனம்... தன் மனதிற்குள் தயாரானார்...
"விதி வலியது..."
எதையும் அனுபவித்த பிறகே சுகவனம் இந்த வாசகத்தை சொல்வார்.... காரணம் அதுபோன்ற அனுபவங்களிலிருந்து சிக்காமல் தப்பிக்க அவருக்கு தெரியாது...
"எவ்ளோ பெரிய ரிப்போர்ட் தெரியுமா?..."
"எவ்ளோ பெரிய Turn-over தெரியுமா?..."
"எத்தனை லட்சம்... எவ்ளோ டென்ஷன் தெரியுமா?..." என்று முயற்சி செய்து கேட்டுவிட்டார் சுகவனம், விளைவுகளை யோசிக்காமல்...
சுகவனம் தப்புக்கணக்கு போட்டது ரிப்போர்ட்டில் மட்டுமல்ல... தன் மனதிலும் கூட ....
கேள்வி கேட்டுவிட்டு, இடுப்பில் கை வைத்துக்கொண்டு நிமிர்ந்து புவனாவை பார்த்தார்...
சுகவனம் அந்த நிறுவனத்தில் சேர்ந்து 15 ஆண்டுகள் ஆகிறது... அலுவலகத்தில் புதிதாக சேர்ந்த போது, அங்கு நடப்பவைகள் ஒன்று விடாமல் புவனாவிடம் "discuss" என்ற பெயரில் ஒப்பித்துவிடுவார்..
நிச்சயதார்த்தம் முடிந்த ஆண்கள் எப்படி உணர்ச்சிவயப்பட்டு... தன்னுடைய மற்றும் தன் குடும்பம் சார்ந்த விவரங்களை, சுயக்கட்டுப்பாடின்றி... பின் விளைவுகள் பற்றி ஆராயும் திறனிழந்து... உளறிவிடுவார்களோ அது போல...
திருமணத்திற்கு பிறகு....
"ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்"...
"தன் வினை தன்னைச் சுடும்"...
"வினை விதைத்தவன் வினையறுப்பான்"....
என்பன போன்ற வாசகங்களை மட்டுமே பேசக்கூடும்...
அது போலவே சுகவனதின் நிலையும்....
....ஆரம்பித்தாள் புவனா....
"சும்மா குதிக்காதீங்க.....
"உங்க ஆபீஸ் Turn-overக்கு நீங்க என்ன செஞ்சீங்க..."
"யாரோ வெய்யில்லேயும் மழையிலேயும் திரிஞ்சி சேல்ஸ் பண்ணிட்டு வர்றாங்க.... அந்த விவரத்தை பேப்பர்ல பார்த்து "எக்ஸல்ல (ms-excel)"டைப் பண்ணி பிரிண்ட் எடுத்து கொடுக்கறதிலேயே 1008 தப்பு..."
"நானா இருந்தா நீங்க கொடுக்கற ரிப்போர்ட்டை கிழிச்சி உங்க மூஞ்சிலேயே எரிஞ்சிருப்பேன்..."
"அப்பகூட என்ன தப்புனு உங்களுக்கு புரியாது..."
"சும்மா.... இங்க வந்து அலட்டிக்கீறிங்க...."
பேய்-அரைந்தாற்போல் நின்றார் சுகவனம்....
"ஆகா... கிழிச்சிஎரிஞ்சது இவளுக்கு எப்படி தெரியும்..."
"ஆபீஸ்ல நடந்தத இவ்ளோ தெளிவா சொல்லறாளே..."
"ம்ஹூம் .... இதுக்கு மேலயும் நம்ம ஆபீஸ் வேலையோட பெருமையை இவகிட்ட பேசக்கூடாது... இப்படி அசிங்கப்படுத்திட்டாளே... ச்சே..."
"அப்போ ரஞ்சனிக்கு பதில் யார் இருந்தாலும் நம்ம கதி இதுதானா... இது தெரியாம போச்சே..." என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டார் சுகவனம்.
எப்போதுமே நமக்கு ஓரிடத்தில் உருவாகும் கேள்விகளுக்கு வேறு ஒரு சந்தர்ப்பத்தில்... எதிர்பாராத விதமாகத்தான் பதில் கிடைக்கும்... அது போலத்தான் சுகவனத்திற்கு ஆபீஸ் சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கு புவனா மூலமாகத்தான் விடை கிடைக்கும்...
அப்படியொரு முக்கியமான ரிப்போர்ட்டை தயாரிக்கும் தனக்கு என் இப்படி நடக்கிறது என்பது அவருக்கு புரிந்தது...
நிறுவனத்தின் வருமானத்திற்கும் தனக்கும் பெரிய சம்பந்தம் ஒன்றுமில்லை என்பதை புரிந்துகொண்டார் சுகவனம்...
நிமிர்ந்து பார்த்தார் சுகவனம்... புவனா அங்கில்லை... எப்போது போனாள் என தெரியவில்லை... சமையலறையிலிருந்து குரல் வந்தது...
"ஆபீஸ்ல நடந்ததையே நினைச்சுட்டு இருக்காம... குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்..." என்றாள் புவனா...
ஆபீஸில் தனக்கு ஏற்படும் அனுபவங்களை யாரோ புவனாவுக்கு தெரிவிக்கிறார்கள் என்ற சந்தேகம் எப்போதுமே சுகவனத்திற்கு உண்டு...
தொடரும்....
Super choks you are rocking and I think this the best of all the episodes
ReplyDelete